கேராளவில் தொடர்ந்து இரண்டாவது முறை முதலமைச்சராக பினராயி விஜயன் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
கேராளவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி 99 இடங்களில் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து மார்க்சிஸ்ட் மாநில குழுவின் தலைமையில் நடந்த கூட்டத்தில் சட்டமன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும், முதல்வராகவும் பினராயி விஜயன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தலைமை செயலகத்தின் அருகே உள்ள சென்ட்ரல் ஸ்டேடியத்தில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.பதவியேற்பு விழாவுக்கு முன்பு கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த புன்னப்புரா வயலாறு தியாகிகள் நினைவிடத்தில் பினராய் விஜயன் மரியாதை செலுத்தினார்.

பினராயி விஜயனுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பினராயி விஜயனைத் தொடர்ந்து 20 அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவி ஏற்றுக் கொண்டனர்.
இரண்டாவது முறையாக பதவி ஏற்றுள்ள பினராயி விஜயன் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களில் 17 பேர் புதியவர்களாவர்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர்கள் பதவி ஏற்பில் பங்கேற்கவில்லை. பினராயி விஜயன் பதவி ஏற்பு விழாவில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார்.







