கேரளா படகு விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.10லட்சம் நிவாரண நிதியை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள தனூர் – ஒட்டுபிரம் கடற்கரையில் உல்லாச படகு சவாரி நடைபெறுவது வழக்கம். கோடை விடுமுறையை முன்னிட்டு இந்தியா முழுக்க பல சுற்றுலாத் தளங்களில் பொது மக்கள் குவிந்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் நேற்று மாலை படகு சவாரியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. படகில் மொத்தம் 50 பேர் பயணம் செய்ததாக சொல்லப்படுகிறது. அவர்களில் 30க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கியுள்ளனர்.
நீரில் மூழ்கியவரை தேடும் பணி மும்முரமாக நடைபெற்றது. இதுவரை 22பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் பலர் ஆபத்தான நிலையில் கொட்டக்கலில் உள்ள MIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படகில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் பரப்பனங்காடி மற்றும் தனுர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்டமாக தகவல் வெளியாகி உள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தனுர் பகுதியில் ஒருவரது இல்ல விழாவில் கலந்து கொள்ள வந்தவர்கள் கும்பலாக படகு சவாரி செய்த போது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தனூர் படகு விபத்தில் உரிமையாளர் மீது பிணையில் வர முடியாத பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மலப்புரம் தானூரைச் சேர்ந்த நாசர் மீது கொலை உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் நாசர் தலைமறைவாகியுள்ளார்.
படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.கேரளா படகு விபத்து சம்பவத்தின் எதிரொலியாக இன்று கேரளா அரசின் அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று காலை விபத்து நடைபெற்ற இடத்திற்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்ததாவது..
”கேரளாவில் நடந்த இந்த படகு விபத்தை வார்தைகளால் விவரிக்க முடியவில்லை.. விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும். மேலும் இது போன்று இனியும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாயும், உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபர்களின் முழு செலவையும் அரசு ஏற்கும்” என தெரிவித்தார்.