தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் நடபெற்ற இந்த ஆலோசனையில், மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய் துறை, காவல்துறைகளின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைவாகவே காணப்பட்டாலும், இதனை மேலும் உயராமல் கட்டுப்படுத்த வேண்டும் என்றார். இதற்காக கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைக்கவேண்டும். கொரோனா கட்டுப்பாட்டுப் பணிகளை சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை போன்ற துறைகளை ஈடுபடுத்தி உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
பணி செய்யும் இடங்கள், திருவிழாக்கள், திருமணங்கள், கூட்டங்கள், நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் மக்களிடையே ஒருசிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும்போது, அவர்கள் அனைவரையும் பரிசோதனை செய்து, தொடர் கண்காணிப்பு செய்து, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். தொற்று பரவாத வகையில், பாதுகாப்பு நடைமுறைகளான முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
போதிய பரிசோதனைகள், தொடர் கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஆகியவற்றை முறையாக பின்பற்றிட பொதுமக்களிடையே தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். தடுப்பூசி ஒன்றே கொரோனாவை வெல்லும் ஆயுதம் என்பதால், மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது என கூறிய அவர், இதுவரை 93.82 விழுக்காடு நபர்கள் முதல் தவணை தடுப்பூசியும், 82.94 விழுக்காடு நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளதாக கூறினார்.
தமிழ்நாட்டில் 43 லட்சம் நபர்கள் முதல் தவணை கொரோனா தடுப்பூசியும், 1.20 கோடி நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசியும், என மொத்தம் 1.63 கோடி நபர்கள் இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டியுள்ளது என தெரிவித்த மு.க.ஸ்டாலின், தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பூசி போடுவதால் ஏற்படும் நன்மைகளை விளக்கி, அவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நிலையை உருவாக்கிட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
– இரா.நம்பிராஜன்