காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலை முதலே மீன்களை வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து மீன்களை வாங்கி செல்கின்றனர்.
சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடி தடைகாலம் முடிந்து கடலில் மீன்பிடிக்க 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்த 450-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கரைக்கு திரும்பினர்.
பெரிய வகை மீன்களை கிரேன் மூலம் விசைப்படகில் இருந்து இறக்கி ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கொண்டு சென்றனர். ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் அதிக அளவில் கரை திரும்பியதால் பெரிய வகை மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு குவிந்து இருந்தது. அதிகாலை முதலே மீன்களை வாங்க ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.
இன்று அதிகாலை முதலே மீன் விற்பனை கலை கட்டிய காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வஞ்சிரம் 1300 முதல் 1500 ரூபாய் வரை விற்பதால் மீன் பிரியர்கள் சற்று அதிகமான விலைக்கே வாங்கி சென்றனர்.
ஆனால் கடந்த வாரத்தைவிட மீன்களின் விலை 50 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை தற்போது அதிகரித்துள்ளதால் மீன் பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இன்று பெரிய வகை மீன்களின் வரத்து அதிகமாக காணப்பட்டதால் மொத்த வியாபாரிகள் மீன்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்; இதனால் சிறிய வகை மீன்களே சில்லறை விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.








