புரட்டாசி மாதத்திலும் களைகட்டிய காசிமேடு மீன் மார்க்கெட்

புரட்டாசி மாதத்திலும் சென்னை காசிமேட்டில் இன்று மீன் விற்பனை களைகட்டியது. புரட்டாசி மாதம் என்றாலே விரதத்துக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் பெரும்பாலானோர் விரதம் இருந்து இறைவனை வழிபடுவார்கள். அசைவ பிரியர்களும் புரட்டாசி…

புரட்டாசி மாதத்திலும் சென்னை காசிமேட்டில் இன்று மீன் விற்பனை களைகட்டியது.

புரட்டாசி மாதம் என்றாலே விரதத்துக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் பெரும்பாலானோர் விரதம் இருந்து இறைவனை வழிபடுவார்கள். அசைவ பிரியர்களும் புரட்டாசி மாதத்தில் மீன்-இறைச்சி சாப்பிடாமல் தங்கள் வாய்க்கு பூட்டு போட்டிருப்பார்கள். இதனால் புரட்டாசி மாதத்தில் மீன்-இறைச்சி வியாபாரம் மந்தமாகவே இருக்கும்.

இந்த வருடம் புரட்டாசி மாதம் கடந்த 17-ந்தேதி பிறந்தது. புரட்டாசி மாதத்தையொட்டி சென்னையில் உள்ள மீன் மார்க்கெட்களில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. காசிமேடு, காவாங்கரை, திருவான்மியூர், சிந்தாதிரிப்பேட்டை, பெரம்பூர், திரு.வி.க.நகர் உள்ளிட்ட நகரின் மற்ற மீன் மார்க்கெட்களிலும் கடந்த வாரம் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது.

கடந்த இரண்டு வாரங்களாக காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் மீன் பிரியர்கள்
குறைவாகவே காணப்பட்ட நிலையில் இன்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள்
வரத்தும், விற்பனையும் அதிகமாக நடைபெற்றது.

அதிகாலை முதலே மீன் வாங்க காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு மீன் பிரியர்கள் குவிந்தனர். இதே போன்று சுற்றுவட்டார பகுதிகளில் மீன் விற்பனை செய்வதற்காக சில்லறை வியாபாரிகளும் அதிகளவில் காணப்பட்டனர். வஞ்சிரம் கிலோ ரூ.1300, சங்கரா ரூ.400 முதல் ரூ.800, நெத்திலி ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது. இறால் மற்றும் நண்டு போன்றவை 400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுவரை இல்லாத வகையில் புரட்டாசி மாதத்திலும் காசிமேடு மீன் மார்க்கெட்டில் இன்று மக்கள் களைகட்டியுள்ளது. இதனால் மீன் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.