இன்று துவங்கும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை முன்னிட்டு‘ ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என பிரதமர் மோடி தமிழில் டிவிட் செய்துள்ளார்.
தமிழகத்திற்கும், உத்தரப்பிரதேசத்திற்கும் குறிப்பாகக் காசிக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையே நீண்டகால தொடர்பு உள்ளது. இதற்காக வாரணாசியில் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில், தமிழகத்திலிருந்து மொத்தம் 216 பேர் இந்த பயணத்தில் பங்கேற்கின்றனர் குறிப்பாக 200 மாணவர்களும் 16 தன்னார்வலர்களும் இந்த பயணத்தில் பங்கேற்றுள்ளனர். பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் இந்த கொண்டாட்ட விழா நடைபெறவுள்ளது. இதனால் இந்த கொண்டாட்ட நிகழ்வு ஒரு மாத காலத்திற்கு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
வாரணாசிக்கும், தமிழகத்திற்கும் இடையேயான ஆழமான கல்வி, பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதே காசி தமிழ்ச் சங்கமத்தின் நோக்கம் ஆகும். இந்த சங்கமத்தில் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், கலாச்சார நிகழ்வுகள், கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இந்த நிகழ்ச்சியின் அறிவுசார் பங்குதாரர்களாகச் சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் செயல்படுகின்றது. இன்று பிரதமர் மோடி துவக்கி வைக்கும் இந்த இந்த நிகழ்ச்சி டிசம்பர் 19ஆம் தேதி வரை காசியில் நடைபெறுகின்றது.
இந்நிலையில், பிரதமர் மோடி அவரின் டிவிட்டர் பக்கத்தில் “இந்தியாவின் கலாச்சார தொடர்புகளையும் அழகிய தமிழ் மொழியையும் கொண்டாடும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சியான காசி தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்க வாரணாசிக்கு வருகை தர ஆவலுடன் காத்திருக்கிறேன்” என தமிழில் பதிவிட்டுள்ளார்.
மேலும், முன்னால் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். அதில், “உலகின் மூத்த மொழியாகவும் பிற மொழிகளுக்கெல்லாம் தாயாகவும் விளங்கும் தமிழ் மொழிக்கு, மேலும் பெருமை சேர்க்கும் வண்ணம் உத்திர பிரதேசம், வாரணாசியில் மாண்புமிகு பிரதமர் அவர்களால் துவக்கி வைக்கப்படும் “காசி தமிழ்ச் சங்கம்” நிகழ்ச்சி சரித்திர சாதனை படைக்க எனது நல்வாழ்த்துகள்” என கூறியதோடு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.