பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படத்தின் முதல் பாடல் தொடர்பாக ட்விட்டரில் த்ரிஷா, கார்த்தி நடத்திய உரையாடல் வைரலாகி வருகிறது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரிப்பில் பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதன் முதல் பாகம் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இரண்டாம் பாகம் திரையரங்குகளில் வருகிற ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாகத்தின் முதல் பாடலான ‘அக நக’ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துவிட்டது. இதுதொடர்பாக கார்த்தி மற்றும் த்ரிஷா படத்தில் நடிக்கும் வந்தியதேவன், குந்தவை பாத்திரங்ககளை போல ட்விட்டரில் நடத்திய உரையாடல் வைராகி வருகிறது. முதலில் கார்த்தி, “இளையபிராட்டி hi” என த்ரிஷாவை டேக் செய்து ட்வீட் போட்டார். அதற்கு பதில் வராததால் ‘என்ன பதிலே இல்லை?’ என்று மீண்டும் ஒரு ட்வீட் போட்டார். அதற்கு த்ரிஷா, ‘என்ன வாணர்குல இளவரசே?’ என்று கேட்டார்.
இதையும் படிக்க: – உலகின் மிகப்பெரிய ஜிபிஎஸ் வரைபடம் – சக்கர நாற்காலியில் வரைந்து இளைஞர் கின்னஸ் சாதனை
‘தங்கள் தரிசனம் கிடைக்குமா?’ என கார்த்தி மகிழ்ச்சியுடன் கேட்க, ‘ம்ம்ம்.. யோசித்து செய்தி அனுப்புகிறேன்.’ என்று த்ரிஷா பதிலளித்தார். ‘கடல் கடந்து சென்று உங்கள் ஆணையை நிறைவேற்றிவிட்டு வருபவனுக்கு மோரை மட்டும் கொடுத்து அனுப்பி விடமாட்டீர்களே?’ என்று கார்த்தி கேட்க, ‘வேறென்ன வேண்டும் வந்தியத்தேவருக்கு. கொடுத்த பொருளை திருப்பி கேட்க போகிறீர்களோ?’ என்று த்ரிஷா ட்வீட் போட்டார்.
‘ஐயய்யோ என் உயிர் என்றுமே உங்களுடையது தேவி. நான் பழையாறை வந்ததும் நாம் vibe ஆக ஒரு பாடல் தயார் செய்ய சொல்லுங்களேன்.’ என்று கார்த்திக் கூற, ‘வீரரே பாடல் எப்போதோ ready மாலை 6 மணி வரை காத்திருங்கள்.’ என்று பதிலளித்தார்.
-ம.பவித்ரா







