கர்நாடகா தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு போட்டியாக நோட்டாவும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், மொத்தமாக 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.
கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 36 வாக்கு எண்ணும் மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.இந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 65 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலை வகித்த காங்கிரஸ் கட்சியே, 136 இடங்களை கைப்பற்றி அங்கு ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்த நிலையில், கர்நாடகா தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு போட்டியாக நோட்டாவும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 42 புள்ளி 9 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இது 2018ஆம் ஆண்டு பெற்ற வாக்குகளை விட 4 பூஜ்ஜியம் 76 சதவீதம் அதிகமாகும். கடந்த முறை பாஜக 36.35 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், இந்த முறை 36 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது.
2018ஆம் ஆண்டு 18 புள்ளி 3 சதவீத வாக்குகள் பெற்ற மதசார்பற்ற ஜனதா தளம், இந்த முறை 5 சதவீதம் குறைந்து 13 புள்ளி 3 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. முக்கிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக நோட்டா வாக்கு சதவீதத்தில் 4ஆவது இடத்தை பிடித்துள்ளது. நோட்டாவுக்கு பூஜ்ஜியம் புள்ளி 70 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.
நோட்டாவுக்கு அடுத்தபடியாக அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பூஜ்ஜியம் புள்ளி 58 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது. பி.எஸ்.பி கட்சி பூஜ்ஜியம் புள்ளி 31 சதவீத வாக்குகளும், ஓவைசி கட்சி பூஜ்ஜியம் புள்ளி பூஜ்ஜியம் 2 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன.
- பி.ஜேம்ஸ் லிசா









