கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடந்த ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் நாகுரி பகுதியில் கடந்த மாதம் 19ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்து பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இதனை விசாரித்த கர்நாடக டிஜிபி இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என்று கூறினார். குறிப்பாக இந்த கும்பல் பயங்கரவாத தாக்குதலை கட்டவிழ்த்து விட திட்டம் தீட்டி உள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார்.
தற்போது இந்த வழக்கில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் பிற தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்கை என்ஐஏ-வுக்கு மாற்ற மாநில அரசு முடிவு கடந்த மாதம் செய்தது.
மேலும், இந்த வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைக்குமாறு கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா உள்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை அனுப்பியிருந்தார். இந்த நிலையில், மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணையை என்ஐஏ ஏற்றுள்ளது.
இதுகுறித்து மங்களூரு போலீஸ் கமிஷனர் என்.சஷிகுமார் கூறுகையில், மங்களூரு நகர காவல்துறையில் இருந்த இந்த வழக்கை என்ஐஏ விசாரிக்கும் என்று தெரிவித்தார். இதனையடுத்து என்ஐஏ தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது. மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான ஷாரிக்கிடம் விசாரணை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.







