கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலின் தாக்கம் குறைந்திருப்பதையடுத்து திரையங்குகள், கல்லூரிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை நிலவரப்படி புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,869 ஆக இருந்தது. ஒரு நாளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42 ஆக இருந்தது. ஒரே நாளில் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 3,144 ஆகவும் இருந்தது. இப்போது கர்நாடகா முழுவதும் 30, 082 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் இன்று விதான் சவுதாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனையைத் தொடர்ந்து கீழ்கண்ட தளர்வுகளை கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.
இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். ஊரடங்கின் போது ஏற்கனவே உள்ள விதிமுறைகள் அமலில் இருக்கும்.
சினிமா திரையரங்குகள், மல்டிபிளக்ஸ்கள், ஆடிட்டோரியங்கள் ஆகியவை 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. அரசால் வெளியிடப்படும் நிலையான வழிகாட்டும் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உயர் கல்வித்துறையின் கீழ் செயல்படும் கல்லூரிகள், கல்வி அமைப்புகள் வரும் 26ம் தேதி முதல் திறக்கலாம். கொரோனா கட்டுப்பாடு குறித்த வழிகாட்டும் நடைமுறைகளை பின்பற்றி கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் அல்லாத பிற ஊழியர்கள் கொரோனா தொற்று தடுப்பூசி ஒரு தவணையாவது செலுத்தியிருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
அதே போல திறன் மேம்பாட்டு பயிற்சிகள், தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கும் நிறுவனங்கள் திறக்க அனுமதிக்கப்படுகிறது. பயிற்சி மையங்களுக்கு வரும் பயிற்றுநர்கள், மாணவர்கள் ஒரு தவணை கொரோனா தடுப்பூசியாவது செலுத்தியிருக்க வேண்டியது கட்டாயமாகும்.
இவ்வாறு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.