கன்னியாகுமரி மாவட்டம் நல்லூர் பேரூராட்சியில் உறுப்பினர்களின் கருத்தை கேட்காமல் தன்னிச்சையாக தலைவர் தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக கூறி பேரூராட்சி கவுன்சிலர்கள் இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாணடம் அடுத்த நல்லூர் பேரூராட்சியில் 18 கவுன்சிலர்கள் உள்ளனர். நல்லூர் பேரூராட்சி அலுவலக கட்டிடம் இடமாற்றம் செய்வது குறித்து பேரூராட்சி கவுன்சிலர்களிடம் கருத்து ஒப்புதல் பெறாமல் திமுக பேரூராட்சி தலைவி வளர்மதி தன்னிச்சையாக தீர்மானம் எடுத்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே பேரூராட்சி தலைவியின் செயல்பாடுகளை கண்டித்து திமுக, பாஜக, காங்கிரஸ் மற்றும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் அலுவலகத்தின் வாயிலில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளான இன்றும் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்றால் போராட்டத்தை தீவிரபடுத்தவுள்ளதாக கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.







