சந்திரமுகி 2 படப்பிடிப்பில் நடித்து முடித்ததை தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத் விஜய் சேதுபதியுடன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டில் கேங்ஸ்டர் படம் மூலம் அறிமுகமானவர் கங்கனா ரனாவத். மிக குறுகிய காலத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கிய கங்கனா, தாம் தூம் படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். அதேபோல், தெலுங்கிலும் கங்கனா ரனாவத்துக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன.
கங்கனா, தற்போது எமர்ஜென்ஸி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தியில் உருவாகி வரும் இந்தப் படம் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட எமர்ஜென்ஸி கால கட்டத்தை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளது. அண்மையில் எமர்ஜென்ஸி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த வீடியோ யூடியூபில் வெளியானது. இந்தப் படம் நவம்பர் 24-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கங்கனா தற்போது தமிழில் சந்திரமுகி 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கு அடுத்ததாக நடிகர் மாதவனுடன் தமிழ் படமொன்றில் நடிக்கிறார். இந்நிலையில், மலையாள இயக்குநர் விபின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் திரில்லர் படமொன்றில் நாயகியாக நடிக்க கங்கனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. த்ரில்லர் கதைக்களத்தில் இந்த படம் உருவாக உள்ளதாகவும், விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.







