அந்தக்காலத்து பாடல்கள் போல் இந்தக்காலத்து பாடல்கள் இல்லை என்பது அன்றாடம் நம் காதில் விழத்தான் செய்கிறது. ஆம் அந்தக்கால பாடல்களில், வீரமும் உண்டு, காதலும் உண்டு, இன்பமும் உண்டு, துன்பமும் உண்டு. அத்தகைய பாடல்களை எழுதிய கவிஞர்கள், பாடிய பாடகர்கள் என ஏதோ ஒரு பாடல் நம்முடனே ரீங்காரமிடுகிறது.
கம்பீரக் குரல், காந்தர்வக் குரல் என பலவகை குரல்கள் இருந்தாலும், பாரதி குறிப்பிட்டதை போல சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்த ஒரு குரல் கண்டசாலாவுடையது. ஆந்திராவின் சவுதப்பள்ளி கிராமத்தில் பிறந்த கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் சிறுவயதில் தந்தையிடம் இசை பயின்றார். கண்டசாலாவுக்கு இசையின் மீது இருந்த ஆர்வத்தை அறிந்த தாய்மாமன், இசைப்பயிற்சி அளித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாட்டு விடுதலைக்காக நடைபெற்ற
கூட்டங்களில், தலைவர்களின் வீர உரைகளைக் கேட்டு, நாட்டுப்பற்றை வளர்த்துக் கொண்ட கண்டசாலா, 1942-ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டு கைதாகி சிறையில் இருந்தார். விடுதலையான உடன், திரைப்படங்களில் பாட வாய்ப்புத் தேடினார்… அகில இந்திய வானொலி அடைக்கலம் தர, பின்னர் என்ன ஆகாய வீதியில் அழகான வெண்ணிலாவாக ஒளிவீசத் தொடங்கியது. கண்டசாலாவின் குரலைக் கேட்ட தெலுங்கு திரையுலகம், அந்தக் குரலை தக்கவைத்துக் கொண்டது… என்.டி.ராமாராவின் முதல் படமான மானதேசம் திரைப்படத்திற்கு கண்டசாலா இசையமைத்தார்.
தமிழிலும் ‘பாதாள பைரவி’, ‘மாயாபாஜார்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து, பாடல்களைப் பாடினார். தேவதாஸ் திரைப்படத்தில் கண்டசாலா பாடிய, ‘உலகே மாயம், வாழ்வே மாயம்’ பாடல் அந்தக்கால காதலர்களுக்கு அருமருந்தாய் அமைந்தது.
பாசமலர் திரைப்படத்தில் இடம்பெற்ற மலர்களைப்போல் தங்கை பாடல், அண்ணன் – தங்கை உறவைப் பேசினால், அன்புச் சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற முத்துக்கு முத்தாக… சொத்துக்கு சொத்தாக பாடல், கண்டசாலாவின் குரலில் காலம் கடந்தும் அண்ணன் – தம்பி பாசத்தை பாடுகிறது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், துளு மற்றும் இந்தி உள்ளிட்ட பல பாடல்களை கண்டசாலா பாடியுள்ளார். பத்மஸ்ரீ விருது உட்பட சிறந்த பின்னணிப் பாடகருக்கான ஆந்திர அரசின் விருதுகளை பெற்றவர் கண்டசாலா.
உடல்நலக்குறைவால் 1974-ஆம் ஆண்டு, சென்னையில் உள்ள மருத்துவமனையில் கண்டசாலா காலமானார்… அதற்கு முந்தைய நாள் மருத்துவமனையில், படுக்கையில் இருந்தபடியே ஆவணப்படத்திற்காக பாடியது குறிப்பிடத்தக்கது. (பிப்.11 – பழம்பெரும் பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளருமான கண்டசாலாவின் நினைவு நாள்).