சென்னை கலாஷேத்ரா முன்னாள் மாணவியின் பாலியல் புகார் வழக்கில் இன்னும் ஒரிரு நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவிருப்பதாக அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் இறுதியில் தொடங்கி ஏப்ரல் மாதம் முழுவதுமாக கலாஷேத்ரா மாணவிகள் அந்த கல்லூரியில் படிக்கும் பேராசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக போராட்டத்தில் குதித்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து 2019ம் ஆண்டு அந்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் 3 ம் தேதி கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஹரிபத்மன் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு பதிவு செய்த அடையாறு மகளிர் காவல் நிலைய போலீசார் ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவிகளிடம் நேரிடையாக விசாரணை நடத்தி விவரங்களை குற்ற பத்திரிக்கையில் சேர்த்துள்ளனர்.
இந்த நிலையில், குற்றப்பத்திரிகை இன்னும் ஓரிரு நாட்களில் தாக்கல் செய்ய உள்ளதாக அடையாறு மகளிர் காவல் நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர். பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டு 60 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்ததை தொடர்ந்து கடந்த ஜூன் 6ம் தேதி அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.கண்டிஷன் பெயிலில் வெளியே வந்த ஹரிபத்மன் தினமும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.
- பி.ஜேம்ஸ் லிசா







