கடலூர் அருகே கபடி விளையாட்டின்போது உயிரிழந்த வீரரை பரிசு கோப்பையோடு நல்லடக்கம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
வெண்ணிலா கபடி குழு படத்தில் கதாநாயகனாக வரும் விஷ்னு விஷால் களத்தில் விளையாடிக்கொண்டு இருக்கும்போதே உயிரிழந்துவிடுவார். அதேபோல் நிஜத்தில் ஒரு சம்பவம் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் புறங்கணி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விமல்ராஜ் (வயது 21). கபடி அணி வீரரான இவர் சேலம் தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நேற்று முன்தினம் பண்ருட்டி அடுத்த மானடிகுப்பத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் PP அணி சார்பில் விமல் ராஜ் கலந்து கொண்டு விளையாடினார். அப்போது எதிர்பாராத விதமாக ஆடுகளத்தில் விமல் ராஜ் கீழே விழுந்து மயக்கம் அடைந்தார். உடனே சக வீரர்கள் விமல்ராஜை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விமல்ராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பின்னர், முத்தாண்டிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமல்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை பிறகு அவரது உடல் சொந்த கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் கதறி அழுது விமல்ராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
விமல் ராஜ்க்கு கபடி மீது ஆர்வம் அதிகம். சிறுவயது முதல் கபடி விளையாடி பல வெற்றிகளையும் பரிசு கோப்பைகளையும் பெற்றுள்ளார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த விமல்ராஜ்க்கு தாய்,தந்தையின் வாழ்வாதராம் விமல்ராஜை நம்பிதான் உள்ளது. இந்நிலையில், தற்போது கபடி விளையாடும் போது விமல்ராஜ் உயிரிழந்துவிட்டார். இதனால் அவரது குடும்பம் வாழ்வாதாரம் இழந்து நிற்கதியாக நிற்கிறது. எனவே அரசு இவர்கள் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்..
இதனிடையே, இடுகாட்டில் விமல்ராஜ் உடலை புதைத்த போது அவரது நண்பர்கள் அவர் கபடி விளையாடி பெற்ற கோப்பையினை உடன் வைத்து புதைத்த வீடியோ வெளியாகி அனைவரையும் நெகிழ்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
– இரா.நம்பிராஜன்