விளையாட்டின்போது கபடி வீரர் உயிரிழப்பு

கடலூர் அருகே கபடி விளையாட்டின்போது, வீரர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர், பெரியபுறங்கணி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விமல்ராஜ் (வயது 21).…

கடலூர் அருகே கபடி விளையாட்டின்போது, வீரர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர், பெரியபுறங்கணி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விமல்ராஜ் (வயது 21). கபடி அணி வீரரான இவர் சேலம்
தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 2-ம்ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், சேலத்தில் உள்ள கபடி அகாடமி ஒன்றில் கபடி பயிற்சி பெற்று வந்தார்.

 

நேற்று இரவு பண்ருட்டி அடுத்த மானடிகுப்பத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் இவர் கலந்து கொண்டு விளையாடினார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். கீழே விழுந்ததும் கீழகுப்பம் கிராம எதிர் அணியை சேர்ந்த வீரர் பிடிக்க முற்பட்ட போது இவரது மார்பில் அடிபட்டு சுயநினைவில்லாமல் கிடந்தார்.

 

உடனே அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் விமல்ராஜை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விமல்ராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் இது பற்றி தகவல் அறிந்ததும் முத்தாண்டிக்குப்பம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமல்ராஜ் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கபடி விளையாட்டின் போது வீரர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.