அரவக்குறிச்சி தொகுதியின் பாஜக வேட்பாளரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1,52,879 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,33,58,805 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 839 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,69,275 ஆக உயர்ந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, தற்போது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத்தொடர்ந்து வீடு திரும்பி உள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் இன்று கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இந்நிலையில் கரூர் அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலைக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். ” எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னோடு தொடர்பிலிருந்த அனைவரும் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.