மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடம் கட்டுவதற்காக இந்தியா- ஜப்பான் இடையே கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது ரூ.1,264 கோடியில் இப்பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. சுற்றுச்சுவர் கட்டும் பணியை தவிர வேறு எந்த பணியும் தொடங்காமல் இருந்தது.
மேலும் பிரதான கட்டுமான பணிக்கான நிதியை ஜிக்காவிடம் (ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை) மத்திய அரசு கோரி இருந்தது. இதில் நீடித்த இழுபறியால் இரு ஆண்டுகளாக பணி தொடங்கப்படவில்லை. இதற்கிடையே 2021 மார்ச்சில் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கடந்தாண்டு டிசம்பரில் மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது.
இந்நிலையில் ஜப்பான், இந்தியா இடையே கடன் ஒப்பந்தம் கையெழுத்தான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மதுரை எய்ம்ஸ் பற்றி தென்காசி மாவட்டம் பாவூர்ச்சத்திரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் சில விவரங்களைகோரினார்.
இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, ‘தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட இந்தியா, ஜப்பான் இடையே கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. இந்த ஒப்பந்த ஆவணம் கிடைத்தப் பிறகுதான், முழு விவரத்தையும் தெரிவிக்க முடியும்’ என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement: