ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டங்களை முதல் ஊடகமாய் காட்சிப்படுத்தியது நியூஸ் 7 தமிழ். இப்படி ஜல்லிக்கட்டுக்கும், நியூஸ் 7 தமிழுக்குமான பயணம் பற்றிய செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்..!
2017 ஜனவரி 16-ம் தேதி மதுரை மாவட்டத்தின் முகப்பில் உள்ள அந்த கிராமம்… அடுத்த சில மணி நேரத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதும் என நினைத்திருக்காது. ஒரு இனம் தன் அடையாளத்தை இழக்கும்போது தன்னெழுச்சியாய் உரிமை குரல் எழுப்பும் என்பதற்கு வரலாற்று சான்றானது 2017-ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம்.
காலம் காலமாய் ஏறு தழுவி, வீறு கொண்டு இனம் காக்க, தமிழினத்தின் அடையாளமாய் திகழ்ந்த ஜல்லிக்கட்டு இனி இல்லை என்றவுடன் கிராமம் முதல் மாநகரம் வரை மக்கள் ஆங்காங்கே கிளர்ந்தெழுந்து போராட்ட களத்தில் குதிக்க, தேசம் தாண்டி சர்வதேசத்தின் தலைப்புச் செய்தியானது ஜல்லிக்கட்டு.
2014ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடை விதித்தது உச்சநீதிமன்றம். இதன் விளைவு 2015, 2016ம் ஆண்டு வாடிவாசல்கள் வெறிச்சோடின. பொறுத்தார் பூமி ஆள்வார் என உலகுக்கு சொன்ன தமிழன், வலி மிகுந்து களம் புகுந்தான்.
சென்னை மெரினாவில் கூடிய 5 இளைஞர்கள் மழை கண்ட கருமேகமென சில மணி நேரங்களில் 5 லட்சமானது. இருந்தும் தேசத்தின் கவனம் சட்டென திரும்பவில்லை. அங்கே எழுந்தது ஒரு ஊடகம், பொறுப்பும், பொதுநலனுமாய் செயல்பட்ட நியூஸ் 7 தமிழ், ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் தன் படை பரிவாரங்களுடன் இறங்கியது.
போராட்ட களத்தின் ஒரு நொடியையும் விட்டுவிடாமல் பதிவு செய்தது. கடை கோடி தமிழனிடமும் போராட்டத்தின் நியாயத்தை எடுத்துச் சென்றது. சிறப்பு விவாதங்கள், மெரினா, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் பெரிய எல்இடி திரைகள் மூலம் ஒளிபரப்பை காட்டியது.
ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சரிக்கப்பட்ட இடங்களில் எல்லாம் நியூஸ் 7 தமிழ் என்ற பெயரும் இணைந்தே உச்சரிக்கப்பட்டது. மற்ற செய்திகள் எதுவுமின்றி 24 மணி நேரமும் ஜல்லிக்கட்டு போராட்ட செய்திகளை மட்டுமே வழங்கியது. ஒரு கட்டத்தில் போராட்ட தமிழர்களின் முதல் குரலாய் மாறியது நியூஸ் 7 தமிழ்.
பிற தொலைக்காட்சிகளை விட ஒரு படி மேலேபோய் தனது லோகோவிலேயே ஜல்லிக்கட்டு காளையின் உருவத்தை கொண்டு வந்தது. போராட்டம்…அரசுக்கு அழுத்தம்…கிடைத்த மாபெரும் வெற்றி என தமிழர்களோடு போராட்ட களத்திலும், வெற்றி களிப்பிலும் தன்னை முக்கிய பங்காளனாக மாற்றியது நியூஸ் 7 தமிழ்.
அத்தோடு நிற்கவில்லை. அடுத்தடுத்த ஆண்டுகள் நடைபெற்ற அனேக ஜல்லிக்கட்டு போட்டிகளை முழு நேரலை செய்து ஜல்லிக்கட்டு நேரலையில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்தது.
எல்லாவற்றுக்கும் முத்தாய்பாய் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற வீரர்களை கௌரவிக்கும் ஒரு மேடையை அமைத்து Mr.ஜல்லிகட்டு என்ற நிகழ்ச்சியை நடத்தி வெற்றி மகுடத்தில் வைர கல் சேர்த்தது நியூஸ் 7 தமிழ்.
இறுதியாக ஜல்லிக்கட்டுக்கு இருந்த அனைத்து தடைகளையும் நீக்கி, உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் செய்தியையும் விரிவாக வழங்கி மன நிறைவோடு மகிழ்கிறது நியூஸ் 7 தமிழ்.







