கொரோனா தொற்று பாதிப்புக்கு இடையே, மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக முகூர்த்த கால் நடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது.
மட்டுமல்லாது, இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்று முடிவடையும் நிலையில் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுமா என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக முகூர்த்த கால் இன்று காலை நடப்பட்டுள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா அரசு விழாவாக ஆண்டுதோறும் நடைபெறுகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து எந்தவொரு முடிவும் வெளியாகத நிலையில் அலங்காநல்லூர் வாடிவாசலில் விழாக் குழுவினர் முகூர்த்த கால் நட்டுள்ளனர்.
வழக்கமாக ஜனவரி 16 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த முகூர்த்த கால் நடும் விழாவில் பொதுவாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார்கள், ஆனால் இன்று அதிகாலை நடைபெற்ற இந்த விழாவில் அமைச்சர்கள், அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை.
அரசு வழிகாட்டுதல் படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்றும் பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தலாம் என அரசு சொன்னால் அதன்படி போட்டிகளை நடத்துவோம் என்றும் விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








