ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா,இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயக்குனர் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ஜெய்பீம் படம் கடந்த ஆண்டு திரைக்கு வந்து மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இப்படம் ஒய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, நீதியரசர் சந்துரு கையாண்ட வழக்கை மையமாக கொண்டது. இவ்வழக்கில் ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை மையமாக வைத்துப் புனைவுகளுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையையும் அவர்களுக்கு நடக்கும் அநீதியையும் மையமாக கொண்ட இப்படத்தில் சூர்யா நீதியரசர் சந்துரு வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். இப்படம் வெளிவந்த நாள் முதல் பல்வேறு சர்ச்சைகளை கையாண்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஒரு சமூகத்தினர் மனதை புண்படுத்தும் வகையிலும், அவர்களை இழிவுபடுத்தியும், பிற மக்களின் மனதில் வெறுப்பை உருவாக்கும் வகையிலும், அக்கினி குண்டத்தையும், மகாலட்சுமியையும், குருவின் பெயரை இழிவுபடுத்தியும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது. தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரி ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் மனு அளித்திருந்தார்.மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 8ல் அளித்த புகார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் வேளச்சேரி போலீசார், நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர். படக்குழுவினர் சார்பில் இந்த வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரி ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், இந்த புகாரை தாக்கல் செய்யும் முன்பே படத்தில் காலண்டர் இடம்பெற்றுள்ள சர்ச்சை காட்சி நீக்கப்பட்டுள்ளதாகவும், வன்னிய சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை. எனவே இவ்வழக்கை ரத்து செய்ய வேண்டும் என படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்