மருத்துவமனைகளில் கவனக் குறைவாக இருப்பதும், இறப்புகள் ஏற்படுவதும் இயல்புதான் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105வது பிறந்தநாளையொட்டி சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சாவர்கரை, ராகுல் காந்தி தவறாகக் குறிப்பிட்டதாகக் கூறி அவர் மீது போடப்பட்டுள்ள வழக்கு புனையப்பட்டது எனவும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துத்தான் சாவர்க்கர் சிறையிலிருந்து வெளியே வந்தது உண்மை எனவும் அதற்கான கடிதமிருப்பதாகவும் தெரிவித்தார்.
அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து நடைபெறும் கவனக் குறைவு சம்பவங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மருத்துவமனைகள் எப்போதும் பிரச்சினை கூறியதுதான், அங்கு கவனக்குறைவு இருப்பதும் மரணங்கள் ஏற்படுவதும் இயல்பு தான். ஏற்கனவே இருந்த அரசை விட தற்போது உள்ள அரசு, மருத்துவமனைகளில் கவனம் செலுத்திவருவதாகவும், முதலமைச்சரும் மருத்துவமனைகளை ஆய்வு செய்வதாகவும் கூறினார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முன்பெல்லாம் நுழைய முடியாத நிலையிலிருந்தது, தற்போது அந்த நிலை மேம்படுத்தப் பட்டுள்ளது. ஒரு சில குறை இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
காலம் காலமாக மருத்துவமனைகளில் இது நடப்பதாகவும் தனியார் மருத்துவமனைகளும் இது நடக்கவில்லையா என அவர் கேள்வி எழுப்பினார். ஆனால் இதை நியாயப்படுத்தவில்லையெனவும் கடந்த ஆட்சியில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை அந்த அரசு நியாயப்படுத்தியதாகவும் விமர்சித்தார்.
தவறு நடந்திருப்பதைத் தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஒப்புக்கொண்டிருப்பதாகவும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து ஐ என் ஏ சோதனை நடைபெறுவது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, தீவிரவாதம் இருக்கிறது என ஐ என் ஏ சந்தேகப்பட்டால் சோதனை நடத்துவதில் தவறில்லையெனவும் தீவிரவாதிகள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எந்த சித்தாந்தத்தைப் பின்பற்றுவார்களாக இருந்தாலும் அவர்களைத் தேடிப் பிடித்துத் தண்டிக்க வேண்டியது கடமை என அவர் தெரிவித்தார்.