மாரியூர் கடற்கரையில் பராமரிப்பின்றி சேதம் அடைந்துள்ள பெண்கள் உடை மாற்றும் அறைகள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ள அவலம் ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மாரியூர் கிராமத்தில் கடற்கரை அருகில் மிகவும் பழமையான ஸ்ரீ பூவேந்திய நாதர் ஆலயம் அமைந்துள்ளது. இங்குள்ள கடற்கரையில் தினமும் நூற்றுக்கணக்கானோர் புனித நீராடி செல்கின்றனர். அதுமட்டுமின்றி தை மற்றும் ஆடி அமாவாசை காலங்களில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆயிரங்கணக்கானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக கடலில் நீராடி விட்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடலில் புனித நீராடி விட்டு வரும் பெண் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு பெண்கள் உடைமாற்றும் அறை கட்டப்பட்டது. ஆனால்,தற்போது பெண்கள் உடைமாற்றும் அறை கதவுகளின்றி உரிய பராமரிப்பின்றி உள்ளதால் பெண்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் கதவுகள் இல்லாமல் உள்ளதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் பெண் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு உடைமாற்றும் அறையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







