துறைவாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள், மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் நிலை, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறைச் செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் அனைத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துறைவாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசின் அனைத்துத்துறை செயலாளர்களும் பங்கேற்றனர். அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் மாதத்தில் சட்டமன்றத்தை கூட்ட திட்டமிட்டுள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் நிலை எந்த அளவில் உள்ளது? செயல்படுத்தப்பட்டு வரக்கூடிய திட்டங்கள் எப்போது முடிவடையும் என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் துறை வாரியான திட்டப்பணிகள், வருங்காலத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும் விரிவான ஆய்வு நடத்தினார்.
குறிப்பாக வடகிழக்கு பருவ மழை அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்குள் செய்து முடிக்க வேண்டிய பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. மழை நீர் வடிகால் பணிகள், கால்வாய் தூர் வாருதல் பணிகள் குறித்தும் இதில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனையில் அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
துறைவாரியாக ஒவ்வொரு செயலாளரும் தங்கள் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், தாமதமாகும் பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். 2021-22, 2022-23 ஆண்டுகளுக்கான அறிவிப்புகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.தங்கள் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய திட்டங்கள் குறித்து பவர் பாயிண்ட் மூலம் செயலாளர்கள் விளக்கம் அளித்தனர்.
மேலும், நெல் கொள்முதல் நிலையங்களின் நிலை, பனை விதை நடும் பணிகள் எந்த நிலையில் உள்ளது ? என முதலமைச்சர் குறிப்பிட்டு கேட்டறிந்தார். ஒவ்வொரு துறைகளின் செயல்பாடுகள் குறித்து மற்றச் செயலாளர்களும் அறிந்து கொள்வதற்காகவே கூட்டம் என முதலமைச்சர் கூறியுள்ளார்








