காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 15000 கன அடியாக அதிகரித்ததுள்ளதால், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் அருவியில் குளிக்கவும், சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தடை விதித்துள்ளார்.
தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாற்றாம் பாளையம், கேரட்டி, ராசி மணல், கெம்பாகரை, பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளிலும், கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான உன்சான அள்ளி, தெப்ப குளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வந்தது. இதனால், காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இந்த நிலையில், காவிரி ஆற்றில் வெள்ளிக் கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக வந்துகொண்டிருந்த நீரின் அளவு, சனிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாகவும், மதிய நிலவரப்படி நொடிக்கு 15 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவிகளான பிரதான அருவி, சினி அருவி, ஐவார் பாணி மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கத் தடை விதித்துள்ளார். தடையின் காரணமாகப் பிரதான அருவி செல்லும் நடைபாதை, முதலைப்பண்ணை ஆலம் பாடி உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து காணப்பட்ட நிலையில் மழையின் காரணமாக திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும், தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அடிக்கடி அதிகரிக்கக் கூடும் என்பதால், வரும் நீர்வரத்தினை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவிடும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். தடை உத்தரவை அறியாமல் வார விடுமுறையான இன்று ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளாமலும், அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.