நகரங்களில் மட்டுமே பரவியிருந்த ஷவர்மா வாசனை இன்று பட்டித் தொட்டியெல்லாம் பரவியிருக்கிறது.
கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டு மாணவி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து ஷவர்மா பற்றிய தேடல்கள் கூகுளில் அதிகமானது. ஷவர்மா எங்கிருந்து வந்தது? அது உண்மையிலேயே ஆபத்தானதா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கான விடைகளை தேடியிருக்கிறார்கள் தென்னிந்தியர்கள்.ஷவர்மாவின் தாய்நாடு துருக்கி என சொல்லப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஷவர்மா என்னும் அரபிச் சொல் சேவிர்மே (SEVIRME) என்ற துருக்கி மொழிச் சொல்லில் இருந்து வந்தது. ஷவர்மா என்றால் சுற்றுதல் என்று பொருள். கி.பி.18 ஆம் நூற்றாண்டு அல்லது 19-ஆம் நூற்றாண்டில் தற்போது துருக்கியாக உள்ள உதுமானிய பேரரசின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் ஷவர்மா தோன்றியதாக கருதப்படுகிறது. 90ஸ் கிட்ஸ்களையும் 2K கிட்ஸ்களையும் தன்னுடைய சுவையால் கட்டியிழுக்கும் ஷவர்மாவை, ஸ்கெந்தர் எஃபென்டி (ISKENDER EFENDI) என்பவர் பர்சா (BURSA) நகரில் முதன்முதலாக ஆட்டிறைச்சியில் தயாரித்தார். ஸ்கெந்தர் கெபாப் (ISKENDER KEBAP) என்று இவரது பெயரில் இருக்கும் உணவு இன்றைக்கும் துருக்கியில் பிரபலமான உணவாக இருக்கிறது.
இறைச்சியை மிகுதியான சுவை நிறைந்த உணவாக சமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் தயாரித்த ஷவர்மா வெகுவிரைவில் மத்திய கிழக்கு நாடுகளில் பிரபலமானது. ஸ்கெந்தர் எஃபென்டி உருவாக்கிய ஷவர்மாதான் இன்றைக்கு குக்கிராமங்களில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஷவர்மா பிரபலமடைவதற்கு முன்னர் துருக்கி, லெபனான் உள்ளிட்ட நாடுகளில் இறைச்சி கோர்க்கப்பட்ட கம்பியை கிடைமட்டமாக தீயில் வைத்து ஷவர்மா சமைக்கும் முறை இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல் 1800- வரை உருளை வடிவிலான ஷவர்மா மக்களுக்கு அறிமுகமாகவில்லை எனவும் ஆரம்பக் காலங்களில் தட்டையாக தயாரிக்கப்பட்டதாவும் ஒரு கருத்து நிலவுகிறது.
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் துருக்கி மக்கள் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து சென்ற போது அவர்களோடு ஷவர்மாவும் இடம்பெயர்ந்தது. 1980-களில் ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பிரபலமான உணவாக மாறி அசைவ உணவகங்களின் தயாரிப்பு பட்டியலில் ஷவர்மா இடம்பெற்றது. ஷவர்மா உலகம் முழுவதும் தடம் பதிக்க ஆரம்பித்தபோது ஒவ்வொரு நாடும் தங்களின் தேவைக்கேற்ப ஷவர்மாவை தயாரிக்க ஆரம்பித்தன. தொடக்கத்தில் மட்டனில் தயாரிக்கப்பட்ட ஷவர்மா நாளடைவில் மக்களின் விருப்பத்திற்கேற்ப சிக்கன், பீப், வான்கோழி என மற்ற இறைச்சிகளிலும் தயாரிக்கப்பட்டது.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஷவர்மா பிரியர்களுக்குத் தெரியாத ஓர் உண்மையும் உள்ளது. உலகம் முழுவதும் AMMAN STYLE, LEBANON STYLE, ISTANBUL STYLE என மூன்று ஸ்டைல்களில் ஷவர்மா தயாரிக்கப்படுகிறது. இந்தியா போன்ற நாடுகளில் LEBANON STYLE பின்பற்றப்படுகிறது. சிக்கனுடன் வறுத்த உருளைக்கிழங்கை சேர்த்து சமைக்கப்படும் அம்மான் ஸ்டைல் (AMMAN STYLE) சில மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படுகிறது. மட்டனுடன் தக்காளியை சேர்த்து தயாரிக்கப்படும் ISTANBUL STYLE ஷவர்மா, மட்டனை அதிக அளவில் விரும்பும் நாடுகளில் தயாரிக்கப்படுகிறது.
இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் கேரள மாநிலத்தில் முதன்முதலாக ஷவர்மா அறிமுகமானதாகவும் 2010-களில் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநில மக்களிடம் பிரபலமடைந்ததாகவும் கூறப்படுகிறது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இளைஞர்கள், பதின்பருவத்தினர் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததை அடுத்து உணவகங்களில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த ஷவர்மா, சாலையோர கடைகளில் தனி விற்பனைக் கடையாக மாறியது. அதனைத்தொடர்ந்து சிறு நகரங்களுக்கும் ஷவர்மாவின் புகழ் பரவியது. ரோல் ஷவர்மா, பிளேட் ஷவர்மா, மெக்சிகன் ஷவர்மா என வகைகளில் தயாரிக்கப்படும் ஷவர்மா குறைந்தபட்சம் 60 ரூபாய் முதல் அதிகபட்சமாக 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.shawarma
வைட்டமின், கார்போஹைட்ரேட், புரதம் என பல்வேறு சத்துக்களை உள்ளடக்கியுள்ள ஷவர்மாவில் 300 முதல் 400 கிராம் வரையிலான கலோரி அடங்கியுள்ளது. ஷவர்மா தயாரிப்பு என்பது ஆகச்சிறந்த சமையற் கலையாக பார்க்கப்படுகிறது. இறைச்சியை சரியாக வேகவைக்காமல் தயாரித்து கொடுத்தால் அது உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவாக மாறும். அதேபோல் கெட்டுப்போன பழைய இறைச்சியில் ஷவர்மா தயாரிக்கப்பட்டால் அதில் உள்ள நச்சுவாய்ந்த பாக்டீரியாக்களால் உயிருக்கே ஆபத்தானதாக முடியும்.
ஷவர்மாவில் கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து அதிக அளவில் இருப்பதால் அதை அடிக்கடி உட்கொள்வது உடலுக்கு நல்லதல்ல என எச்சரிக்கும் மருத்துவர்கள் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட ஷவர்மாவை எப்போதாவது ஒருமுறை எடுத்துக்கொள்ளலாம் என அறிவுறுத்துகின்றனர்.
இளம் தலைமுறையின் நேசத்திற்குரிய உணவுகளில் தவிர்க்க முடியாத உணவாக மாறிவிட்ட ஷவர்மா, அனைத்துக் கடைகளிலும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவதை உணவு பாதுகாப்புத்துறையும் தமிழ்நாடு அரசும் உறுதி செய்ய வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.