இது உத்தரபிரதேசமல்ல, இது தமிழ்நாடு என அறச்சீற்றத்துடன் திமுகவின் தகவல் தொழிற்நுட்ப செயலாளர் டி.ஆர்.பி. ராஜா பேசினார். அவர் அப்படி எதற்காக பேசினார் என்பதை விரிவாக பார்க்கலாம்.
என்ன செய்கிறது ஐ.டி விங்க் ? என்ற தலைப்பில் திமுகவின் தகவல் தொழிற்நுட்ப அணி சார்பில் டுவிட்டர் ஸ்பேஷில் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் கட்சி தொண்டர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதில் அளித்த டி.ஆர்.பி.ராஜா, கடந்த 2017ல் ஐடி விங்க் ஆரம்பிக்கப்பட்டலும், அது ஒரு வடிவம் பெற்றது என்னவோ, கடந்த 2018ஆம் ஆண்டு ஆகும். அதன் பின்னர் அணியின் செயலாளராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் நிதியமைச்சராக பொறுப்பேற்றதால், நான் கடந்த 2022ல் பொறுப்பேற்றேன் என தனது உரையை தொடங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், திமுக ஐ.டி.விங்க் என்ன செய்கிறது ? எதிரணியை பாருங்கள் என நீங்கள் கூறுவது புரிகிறது. ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். கடந்த சட்டமன்ற தேர்தலில் எதிரணியினரின் இணையதள பக்கங்களில் நமது விளம்பரம் வெளியாகியது. பாஜகவை பொறுத்தவரை கடந்த 2010ல் இருந்து செயல்படுகிறார்கள். ஆனால் அவர்கள் பெய்டு அணியாக மட்டுமே உள்ளனர். அவர்கள் பணம் கொடுத்து எழுத வைக்கின்றனர். திமுகவில் அப்படியல்ல.
நமது ஐடி அணியை தொடங்கும்போது, இதனை ஒரு சமூக வலைதளத்திற்கான அணியாக தொடங்கவில்லை. அதனை சீரமைக்க வேண்டிய பணிகள் அதிகம் உள்ளது என அணியின் முன்னாள் செயலாளர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களே பலமுறை வெளிப்படையாக கூறியுள்ளார். தற்போது அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பூத்துகளுக்கும் தற்போது நமது அணி சார்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆயிர கணக்கில் இருந்த நமது அணி பொறுப்பாளர்களின் எண்ணிக்கை தற்போது லட்ச கணக்காக உயர்ந்துள்ளது. இது எவ்வளவு என்ற முழு புள்ளி விபரங்களை வெளியில் தெரிவிக்க மாட்டோம். அப்படி கூறினால், எதிரணிக்கு நமது பலம் எளிதாக தெரிந்துவிடும்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடிக்கடி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அதற்கு ஏன் திமுக ஐ.டி. விங்க் உடனடியாக பதில் அளிப்பதில்லையே ? என்ற கேள்விக்கு, ’பாஜகவிற்கு வேறு பணிகள் எதுவும் கிடையாது. அவர்கள் செய்யும் தவறை மறைத்து திசை திருப்புவதற்காக இப்படி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். டென்டரே விடாத ஒப்பந்தங்களில் எல்லாம் ஊழல் நடந்திருப்பதாக கூறி அசிங்கப்பட்ட அவர்கள் புடுங்கும் ஆணிகள் எல்லாம் வேண்டாத ஆணிகளே என்றார்.
மேலும், பாஸ்போர்ட் விவகாரத்தில் பிரச்சனை என்றால் அதற்கு முழு பொறுப்பும் ஒன்றிய அரசுதான். ஆனால் அதனை மறைப்பதற்காக நம் மீது குற்றம்சாட்டுகிறார்கள். இதையெல்லாம் தேர்தலுக்கு முன்பே ஒற்றை செங்கலை காட்டி அவர்களை தவிடுபொடியாக்கியவர் நம்ம சின்னவர். இதன் மூலம் ஒட்டு மொத்த பில்டிங்கும் குளோஸ்,’ என்றார்.
’பாஜகவிற்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கிடையாது. திமுக அப்படியல்ல. உட்கட்சி தேர்தலில் கூட ஜனநாயக முறைப்படி நடந்து கொள்கிறது. தேவைப்படும் பாஜகவிற்கு பதில் அளிப்போம். ஆனால் அந்த குற்றச்சாட்டு உண்மையான குற்றச்சாட்டாக இருக்க வேண்டும். நமது பணி என்பது எல்லா தொகுதிகளிலும் மக்களின் பிரச்சனை என்ன என்பதை அறிந்து அதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வைக்கு கொண்டு சென்று தீர்ப்பதுதான். அப்படி பல பிரச்சனைகளை முதல்வர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று தீர்த்துள்ளோம்’ என்றார்.
வாட்ஸ் அப் திமுக ஐ.டி.விங்கின் பங்களிப்பு மிகவும் குறைவாக உள்ளதே ? என்ற கேள்விக்கு அவர், உண்மைதான். அதனை சரி செய்து வருகிறோம். விரைவில் இதற்காக டெக்னிக்கல் சோலியுஷன் ஒன்றை உருவாக்கி வருகிறோம். அதன் பின்னர் இந்த பிரச்சனைகள் எல்லாம் முழுமையாக தீர்வடைந்துவிடும் என்றார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் குறித்து மிகவும் மோசமான அவதூறுகள் பரப்பபடுகிறது. அதனை ஐ.டி.விங்க் கண்டு கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதில் அளித்த டி.ஆர்.பி.ராஜா, எங்களுக்கும் அது போன்ற நேரங்களில் கோபம் வரும். அதேநேரத்தில் ஜனநாயக நாட்டில் பேச்சுரிமைக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். மேலும் இதுபோன்ற விவகாரங்களை புறம்தள்ளிவிட்டு ஆக்கப்பூர்வமான பணிகளை பாருங்கள் என அவர் கூறியுள்ளார். அதற்காக நாங்கள் அமைதியாக இருப்பதில்லை. @ITWreports என்ற டுவிட்டர் ஹேன்டிலுக்கு உங்கள் பார்வைக்கு வரும் பிரச்சனைகளை அனுப்புங்கள்.
அந்த ஹென்டிலை கண்காணிக்க 10 பேர் கொண்ட குழு உள்ளனர். அவர்கள் தொடர்ச்சியாக இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் ஈடுபடும் நபர்களின் விபரங்களை சேகரித்து நமது வழக்கறிஞர்கள் குழுவிற்கு கொடுப்பர். அவர்களின் கருத்தை கேட்ட பின்னர் காவல்துறையில் புகார் அளிக்கப்படும். அதேநேரத்தில் கருத்தை கருத்தால்தான் எதிர் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இது உத்தரபிரதேசமல்ல. அங்கு தங்களுக்கு தங்களுக்கு எதிராக பேசுபவர்கள் மீது உடனே கைது நடவடிக்கை எடுப்பார்கள். இது தமிழ்நாடு, இங்கு பேச்சுரிமைக்கு முழு உரிமை உண்டு என அறச்சீற்றத்துடன் கூறினார். சட்ட வரம்பை மீறாமல் எதிரணியினர் கேள்வி கேட்டால், அதற்கு உரிய பதில் கிடைக்கும் என்றார்.
இப்படி திமுக ஐ.டி.விங்க் சார்பில் அடிக்கடி ஒரு மணி நேர கருத்தரங்கை சமூக வலைதளம் மூலம் நடத்த அவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். இதன் மூலம் தலைமைக்கும், தொண்டர்களுக்கும் இடையிலான இடைவெளி குறையும் என்பதே அவர்களது நம்பிக்கையாக உள்ளது.
இராமானுஜம்.கி
.