போதை ஊசி பயன்படுத்திய கோவை மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தனியார் கல்லூரியில் பி.இ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் அஜய் குமார். இவர் தனது நண்பருடன் அறையில் தங்கியிருந்தார். இந்நிலையில், கடந்த 13.07.2022 ஆம் தேதி உடல்நிலை சரியில்லாமல் தொடர்ந்து வாந்தி எடுத்து வந்துள்ளார். இதையடுத்து, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர், அஜய்குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
இதுசம்பந்தமாக அஜய்குமாரின் தந்தை சௌந்தரபாண்டியன் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் இயற்கைக்கு முரணான மரணம் என மதுக்கரை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், இறந்த மாணவனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், இடது முன் கையில் நரம்பு வழியாக போதை ஏற்படுத்தக்கூடிய மருந்துக்களை ஊசி மூலம் ஏற்றப்பட்டதால் இறப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்தது. இது சம்மந்தமாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், இறந்த மாணவர் வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தண்ணீரில் கரைத்து சிரிஞ்சு (Syringe) மூலமாக போதைக்காக தனக்குத்தானே செலுத்திக் கொண்டது தெரியவந்தது.
மேலும், இறந்த மாணவனின் நண்பர்களை விசாரணை செய்ததில் மேற்கண்ட வலி நிவாரண மருந்தை கும்பகோணத்தில் தனியார் மருந்து கடை வைத்திருக்கும் முகமது பஷீர் என்பவர் எவ்வித மருத்துவர் பரிந்துரை இல்லாமல், லாப நோக்கத்தோடு இம்மாணவனுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. எனவே, மேற்படி வழக்கின் சட்டப்பிரிவை மாற்றம் செய்து, போதை ஏற்படுத்தக்கூடிய வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்த குற்றத்திற்காக முகமது பஷீரை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.
மாணவர்கள் இளம் வயதிலேயே போதை போன்ற தவறான வழியில் செல்லக் கூடாது என்றும், யாரும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எவ்வித மருந்துகளையும் உட்கொள்ளக் கூடாது எனவும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
-ம.பவித்ரா








