சென்னை அருகே ஆட்டோவில் வெளிநாட்டு பெண் பயணி தவறவிட்ட 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பணத்தை ஆட்டோ ஓட்டுநர் நேர்மையாக காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.
சென்னை போரூரைச் சேர்ந்தவர் மோகன் (எ) மணிகண்டன் (வயது 60). நேற்று முன்தினம் இரவு வடபழனி பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அப்போது வட மாநிலப் பெண் ஒருவர் இவரது ஆட்டோவில் சவாரி வந்துள்ளார்.
பின்னர் வீட்டுக்கு வந்து மோகன் ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் ஒரு ஹேண்ட் பேக் இருப்பது தெரியவந்தது. அதை திறந்து பார்த்தபோது அதில் மூன்று கட்டுகள் வெளிநாட்டு பணம் இருப்பது பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
தனது ஆட்டோவில் ஏறிய வெளிநாட்டு பெண் தான் இதனை தவறவிட்டிருப்பதை தெரிந்ததும், பணத்தை ஒப்படைப்பதற்காக சென்னை காவல் ஆணையர் அலுவலகம் செல்ல முடிவெடுத்தார். பின்னர் தகவலறிந்த வேப்பேரி போலீசார் பணத்தை பெற்றுக்கொண்டனர். இது தொடர்பாக சோதனை செய்ததில் அந்த பணம் பங்களாதேஷை சேர்ந்த பணம் எனவும் இந்திய மதிப்பில் இரண்டு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் இருக்கும் எனவும் தெரியவந்தது.
மேலும் உரிய நபரிடம் பணத்தை ஒப்படைப்பதற்காக வேப்பேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, ஆட்டோ டிரைவர் மணிகண்டனின் நேர்மை செயலை காவல்துறை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.
– இரா.நம்பிராஜன்








