வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக முதன்மையான எதிர்கட்சியாக ஆம் ஆத்மி களமிறங்கும் எனத் தெரிகிறது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு இது பின்னடைவை உருவாக்கும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் ஆட்சிக்கு வந்த முதல்நாள் முதலே ஆம் ஆத்மி கட்சியானது பாஜகவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்திற்கு பாஜக ஆளும் மாநிலங்களில் வரி விலக்கு அளித்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தினை அனைவரும் காண வேண்டுமென்றால், இலவசமாக யூ டியூப்பில் பதிவேற்றம் செய்து இருக்கலாமே ? என கேள்வி எழுப்பினார். இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒரே சேர இருந்தது. பாஜக நிர்வாகிகளால் இதற்கு தக்க பதிலடி கூட கொடுக்க முடியவில்லை என அப்போது பேசப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆம் ஆத்மி டெல்லியில் பதவியேற்ற நாள் முதல் சிபிஐ மூலம் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வந்ததும் குறிப்பிடதக்கது. டெல்லியின் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கு சொந்தமான இடங்களில் நேற்று சிபிஐ அதிரடியாக சோதனை நடத்தியது. மதுவிலக்கு துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்ததால் கலால்வரியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி சிபிஐ இந்த சோதனையை மேற்கொண்டது. மணிஷ் சிசோடியாக சம்பந்தபட்ட 21 இடங்களில் இச்சோதனை நடைபெற்றது.
இந்த சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது ஆம் ஆத்மி குறுகிய காலத்தில் அபரித வளர்ச்சியை கண்டு இருப்பதை பாஜகவிற்கு அச்சத்தை உருவாக்கி வருவதாக ஆம் ஆத்மி தொண்டர்கள் கூறி வருகின்றனர். கடந்த 2013ஆம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 70 இடங்களில் போட்டியிட்டு 28 இடங்களில் வென்றது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைத்தார். ஆட்சி அமைத்த 49ஆவது நாளில் ஜன் லோக்பால் அமைக்காததை கண்டித்து தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றிப்பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தார்.
அன்று முதல் இன்று வரை மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக எதிர்த்து வருகிறார். இதற்காக சிபிஐ சோதனையை எதிர்கொள்வது இது முதல் முறையல்ல என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. அனைத்திலும் பாஜக வென்றது. இருப்பினும் மனந்தளராத கெஜ்ரிவால் கோவா. பஞ்சாப் உள்ளிட்ட மாநில தேர்தலில் கவனம் செலுத்த தொடங்கினார். இதிலும் வெற்றியும் கண்டார். ஆம் பஞ்சாப்பில் ஆட்சியை பிடித்தார். மற்ற இடங்களில் சிறிய அளவில் வெற்றி அவருக்கு கிட்டியது.
இதற்கிடையே தற்போது சிபிஐ சோதனை நடைபெற்றது. இந்த சோதனைகளை வென்று சாதனைகளாக மாற்றுவோம் எனவும், அரவிந்த் கெஜ்ரிவாலின் புகழ் நாடு முழுவதும் பரவுவதை பாஜகவால் பொறுத்த கொள்ள முடியவில்லை. அதனால்தான் சிபிஐயை ஏவி தங்களது கோபத்தை வெளிக்காட்டி வருகின்றனர் என அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும் ,மாநிலங்களவை உறுப்பினருமான சஜ்சய் சிங் கூறுகிறார்.
விரைவில் குஜராத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி களமிறங்கும். அங்கு குஜராத் மாடல் அரசு வேண்டுமா ? டெல்லி மாடல் அரசு வேண்டுமா ? என கேள்வி எழுப்பும் என அவர் தெரிவித்தார். டெல்லி அரசின் கல்வித்துறை இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருப்பதாக அமெரிக்காவின் நியூ ஆர்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இதுபோன்றவை பாஜகவை அச்சம் கொள்ள செய்துள்ளது என சஜ்சய் சிங் தெரிவித்தார்.
இவர் கூறிய கூற்றின் அடிப்படையாக கொண்டு பார்த்தால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு பிரதான எதிர்கட்சியாக ஆம் ஆத்மி களமிறங்க வாய்ப்புள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இராமானுஜம்.கி