சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிக்கான
டிக்கெட்டினை வாங்க இரவு முழுக்க கொட்டும் மழையிலும் ரசிகர்கள் காத்திருந்தனர்.
ஐபிஎல் போட்டியின் 16வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று
வருகிறது குறிப்பாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்
அணிக்கு மட்டும் 7 போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
இதன்படி வருகிற மே 6ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று (மே 3ம் தேதி) தொடங்கும் என கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் நேரடியாக டிக்கெட் விற்பனை மற்றும் ஆன்லைன் புக்கிங் நடைபெற உள்ளது.
இதுவரை நடந்து முடிந்த 15 சீசன்களிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை
இந்தியன் அணிகள் போதும் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இதன் அடிப்படையில் மே 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் போட்டிக்கான டிக்கெட் வாங்குவதற்காக மே 2 தேதி இரவில் இருந்தே ஏராளமான ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சூழ்ந்துள்ளனர்.
நேற்று இரவு நேரங்களில் லேசான மழை பெய்து வருகிறது. மழை பெய்தாலும், அதனை பொருட்படுத்தாமல் எங்கும் நகராமல் டிக்கெட்டை வாங்க ரசிகர்கள் ஆர்வத்துடன்
வரிசையில் நின்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குவிக்கப்பட்டுள்ளனர் .







