ஜூலியஸ் பேர் கோப்பை செஸ் போட்டியில் முதல் நாளிலேயே மூன்று வலுவான வீரர்களை தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளார்.
மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் தொடர் 2022 பருவத்தின் 5-வது போட்டியாக ஜூலியஸ் பேர் கோப்பை செஸ் போட்டிகள் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இப்போட்டியில் உலகின் முதல் நிலை வீராரான மேக்னஸ் கார்ல்சன், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி உள்பட 16 வீரர்கள் பங்கேற்கிறார்கள். ஆன்லைன் வழியாக செப்டம்பர் 25 வரை நடைபெறும் இப்போட்டியில் ஒவ்வொரு வீரரும் தலா 15 ஆட்டங்களில் விளையாட வேண்டும்.
16 வீரர்களில் இருந்து 8 பேர் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறுவார்கள். முதல் நாளன்று இந்தியாவின் பிரக்ஞானந்தா, இவான்சுக், டுடா, ஜெல்ஃபண்ட் என மூன்று பிரபல வீரர்களை வீழ்த்தினார். எனினும் கடைசி ஆட்டத்தில் கிறிஸ்டோபர் யூவிடம் தோற்றார் பிரக். முதல் சுற்றில் உலக சாம்பியன் கார்ல்சனிடம் தோற்றார் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி.
முதல் நாள் முடிவில் கார்ல்சன் 10 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பிரக்ஞானந்தா, இவான்சுக், ஹான்ஸ் நீமன், அர்ஜுன் எரிகைசி ஆகியோர் தலா 9 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும் உள்ளனர்.
-ம.பவித்ரா








