விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து அதிக இழப்பீடு பெற்று தர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்கு, பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள இழப்பீடு உழவர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. பாதிக்கப்பட்ட உழவர்களில் 90 விழுக்காட்டினருக்கு இழப்பீடு வழங்கப்படாத நிலையில், மற்றவர்களுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது அநீதியானது என குறிப்பிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாட்டில் குறுவை பருவ நெற்பயிர்களுக்கு பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத்திட்டத்தில் இழப்பீடு செய்யப்படுவதில்லை. சம்பா பயிர்களுக்கு மட்டும் தான் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் காப்பீடு செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு சம்பா நெற்பயிருக்கு 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காப்பீடு பெற்றிருந்தனர். சம்பா பருவத்தில் பெய்த பெருமழையில் பெரும்பான்மையான பயிர்கள் சேதமடைந்த நிலையில், அவற்றுக்கு உரிய இழப்பீட்டை காப்பீட்டு நிறுவனங்கள் தரவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
எடுத்துக்காட்டாக தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 856 கிராமங்களில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. அனைத்து கிராமங்களிலும் உள்ள விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்திருந்தனர். ஆனால், அவர்களில் 7 கிராமங்களைச் சேர்ந்த உழவர்களுக்கு மட்டும் தான் மிகக்குறைந்த தொகை இழப்பீடாக வழங்கப் பட்டுள்ளது. மீதமுள்ள 849 கிராமங்களைச் சேர்ந்த உழவர்களுக்கு ஒரு பைசா கூட வழங்கப்படவில்லை.
உழவர்களைப் பொறுத்தவரையில் ஒரு ஏக்கர் சம்பா நெற்பயிரை சுமார் ரூ.32,500க்கு காப்பீடு செய்கின்றனர். அதற்காக அரசும், உழவர்களும் சேர்ந்து 10% தொகையை பிரீமியமாக செலுத்துகின்றனர். முழுமையாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.30,000 இழப்பீடாக வழங்கப் பட வேண்டும். ஆனால், ஒவ்வொரு விவசாயிக்கும் அவர்களின் சர்வே எண் அடிப்படையில் ரூ.35, ரூ.50, ரூ.66, ரூ.88 என்ற அளவில் தான் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான உழவர்களுக்கு காப்பீடு செய்யப்பட்ட தொகையில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாகவே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
எனவே, உழவர்களை காப்பீட்டு நிறுவனங்கள் சுரண்டுவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. காப்பீட்டு நிறுவனங்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி, பருவம் தவறிய மழையால் உழவர்களுக்கு ஏற்பட்ட இழப்பின் மதிப்பு எவ்வளவோ, அதை இழப்பீடாக
பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.