முதல்வர் ஸ்டாலின் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுத உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து முறையிட முடிவு எனவும் தெரியவந்துள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழ்நாடு அரசு இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையை விட்டு நீக்குவதாக ஆளுநர் சமீபத்தில் அறிவித்தார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையீட்டால் அந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக அன்றிரவே முதல்வருக்கு ஆளுநர் கடிதம் எழுதினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த கடிதத்தில், அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையைப் பெற்று அதன் அடிப்படையில் செயல்படுமாறு ஆளுநருக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியதாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து அதற்கான முயற்சியில் ஆளுநர் இறங்கினார்.
இதன் தொடர்ச்சியாக டெல்லியில் முகாமிட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். வரும் நாட்களில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால், அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி ஆகியோரை சந்தித்து செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து, குடியரசு தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுத உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் – திமுக அரசு இடையே பனிப்போர் முற்றிவரும் நிலையில், இந்த தகவல் வெளியாகி பரபரப்பை கூட்டியுள்ளது.