மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழ்நாடு பெற்றது என்ன? இழந்தது என்ன என்பது பற்றி பார்ப்போம்…
மின்சாரமும், பெட்ரோலியமும் பயன்பாட்டுக்கு வராத காலத்திற்கு, முன்பே இயற்கையோடு இணைந்த நுண்ணறிவால் நாகரிகத்தின் உச்சம் தொட்டு, உலக நாடுகள் அனைத்துடனும் நல்லுறவு கொண்டு விளங்கிய பெருமை கொண்டது தமிழ்நாடு .
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவிலிருந்து வெளியேறிய முன்பும், பின்பும் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் நாடெங்கும் ஓங்கி ஒலித்தன. ஆனாலும் 526 சமஸ்தானங்களாக இருந்த இந்திய நாடு. பிரிட்டிஷ் ஆட்சியின் விடுதலைக்கு பின் சென்னை, பம்பாய், டெல்லி, வங்கம் என மாகாணங்களாகவே நிர்வகிக்கப்பட்டு வந்தன. குறிப்பாக, 1920-ம் ஆண்டு நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும் என உறுதியளித்திருந்தது. ஆனாலும் செயல்பாட்டுக்கு வரவில்லை. 1948-ம் ஆண்டு குடியரசுத் தலைவரான டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் அமைத்த எஸ்.கே.தார் தலைமையிலான `தார் கமிஷன்’ , மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படுவது பிரிவினைக்கு வழிவகுக்கும். எனவே பொருளாதார மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்றது.
தார் கமிஷன் முடிவுக்கு , மாநிலங்களில் எதிர்ப்புகள் எழுந்தன.அதையடுத்து ஜே.வி.பி கமிஷன் அமைக்கப்பட்டது. ஜேவிபி என்பது ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், பட்டாபி சீதாராமையா ஆகிய மூன்று தலைவர்களின் தலைமையில் உருவானது . இந்த கமிட்டியும் தார் கமிஷனின் பரிந்துரையை வழி மொழிந்தது. 1949-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஜேவிபி அறிக்கையில், `மொழிவழி பிரிந்து நிற்பது தேச ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தானது என்றது. மொழிவாரி மாநிலக் கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டு, 1950-ம் ஆண்டு இந்திய அரசமைப்பு உருவாக்கம் பெற்றது. மாகாணங்களில் பல்வேறு வகையான போராட்டங்கள் வெடித்தன.
தெலுங்கு மொழி பேசும் மக்களுக்காக, ஆந்திர மாநிலம் வேண்டும் என கூறி உண்ணாவிரதம் இருந்த பொட்டி ஸ்ரீராமுலு, 1952 ஆம் ஆண்டு டிசம்பர் 15-ம் நாள் உயிர் நீத்தார். இதனையடுத்து வெகுண்டெழுந்த தெலுங்கு மக்கள், வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டனர். பத்துக்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்த, ஆந்திர மாநிலக் கோரிக்கைக்கு அரசு செவி சாய்த்தது. இந்தியாவின் முதல் மொழிவாரி மாநிலமாக அக்டோபர் 1, 1953-ம் ஆண்டு உதயமானது ஆந்திர மாநிலம்.
இந்திய அரசால் முன்பு போல மாநில கோரிக்கைகளை ஒதுக்கிவிட முடியவில்லை. 1953-ம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஃபசல் அலி மற்றும் கே.எம்.பணிக்கர், குன்ஸ்ரு உள்ளிட்டோரை கொண்ட `மாநில மறுசீரமைப்பு ஆணையம்’ அமைக்கப்பட்டது.
1955-ம் ஆண்டு ஃபசல் அலி கமிஷன் அளித்த அறிக்கையில் சில திருத்தங்களை செய்து , 1956-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மாநில மறுசீரமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. 1956 ஆம் ஆண்டு , நவம்பர் ஒன்றாம் தேதி முதல் , இந்திய நாட்டில் 14 மொழிவாரி மாநிலங்களும், 6 யூனியன் பிரதேசங்களும் பிரிக்கப்பட்டது.
இதனிடையே 1956-ம் ஆண்டு விருதுநகரில், விடுதலைப்போராட்ட வீரரான சங்கரலிங்கனார், மெட்ராஸ் மாநிலத்திற்கு, “தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். சங்கரலிங்கனார் மறைந்தாலும், இளைஞர்களின் இதயத்தில் தமிழ்நாடு என்ற சுடரை அவர் ஏற்றி வைத்துவிட்டார்.
1968 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா முதலமைச்சரான போது மதறாஸ் மாநிலம் தமிழ்நாடு ஆனது. மதராஸ் மாகாணம் பிரிவினையின் போது சுமார் 80,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பகுதியை அண்டை மாநிலங்களிடம் பறி கொடுத்தது. இன்று தமிழ்நாட்டின் நிலப்பகுதி, ஒரு லட்சத்து 30 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் மட்டுமே.
அந்தந்த மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகள் அந்த மாநிலங்களோடு இணைக்கப்பட்டன. அப்போது , திடீரென அறிவுக்கு ஒவ்வாத கொள்கை ஒன்று கடைப்பிடிக்கப்பட்டது. அதன் படி நிலத்தின் உரிமையாளர்கள் யாராக இருந்தாலும், அப்பகுதியில் வாழும் பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழியை கணக்கிட்டு அந்தந்த மாநிலத்துடன் நிலப்பகுதிகள் இணைக்கப்பட்டன. இதனால் பெரும்பான்மையான நிலப்பகுதிகளின் உரிமையாளர்களாக இருந்த தமிழர்களின் நிலப்பகுதிகள் அண்டை மாநில அரசுகளால் வலுக்கட்டாயமாக இலவசமாக ஆக்கிரமிக்கப்பட்டது. ஆந்திரா பிரிந்த போது, சித்தூர், திருப்பதி, காளகஸ்தி, நெல்லூர் என 40,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பகுதிகள் பறிபோயின. பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி, காளஹஸ்தி / திருக்காளத்தி கோயில்களில் தமிழ் கல்வெட்டுகள், பட்டயங்கள் இருந்தும் வலுக்கட்டாயமாக ஆந்திராவோடு இணைக்கப்பட்டன. “மதராஸ் மனதே’ என்று சென்னைக்கு ஆந்திர மக்கள் உரிமையை கொண்டாடினர். அப்போது தலையைக்கொடுத்தேனும் தலைநகரை மீட்போம் என தீரத்துடன் செயல்பட்டார் சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானம் . திருத்தணி உள்ளிட்ட சில பகுதிகள் மட்டும் மீண்டும் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டன.
அதே போல் கொள்ளேகால், மாண்டியா, கோலார் தங்கவயல் மற்றும் குடகு மலை பிரதேசம் உள்ளிட்ட தமிழ்நாட்டு பகுதிகள் கர்நாடகா மாநிலத்துக்குள் சிக்கி கொண்டன. தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு, பாலக்காடு ஆகிய பகுதிகளை கேரளத்திடம் தமிழ்நாடு இழந்தது.
மார்ஷல் நேசமணி, பி.எஸ்.மணி உள்ளிட்ட தலைவர்களின் தெற்கெல்லை போராட்டத்தால் , ‘படாஸ்கர் எல்லை ஆணையம்’ அமைக்கப்பட்டது. போராட்டத்தின் போது 11 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். செங்கோட்டை மற்றும் குமரி மாவட்டத்தின் சில பகுதிகள் மீண்டும் தாய் தமிழ்நாட்டோடு இணைந்தது. தமிழில் இருந்து பல மொழிகள் கிளைத்தது போல, தமிழ்நாட்டில் இருந்தும் பல மாநிலங்கள் உருவாகின. எப்போதும் பிறருக்காக விட்டுக்கொடுப்பது, தமிழ்நாடு தான் என்றால் மிகையில்லை……
- ரா.தங்கபாண்டியன், நியூஸ் 7 தமிழ்