டெல்லி உயிரியல் பூங்காவில் மிகவும் பிரபலமான வீணா ராணி என்ற 17 வயது வெள்ளைப் புலி உயிரிழந்ததாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்ததாவது: வீணா ராணி என்ற வெள்ளைப் புலி, பிப்ரவரி 4 முதல் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. சிகிச்சை பெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி வீணா ராணி உயிரிழந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் தொடக்கத்தில் உயிரியல் பூங்காவில் பிறந்த 3 வெள்ளைப் புலி குட்டிகளில் ஒன்று இறந்தது. உடல் நல குறைவால் புலிக் குட்டி சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தது. மற்ற இரண்டு குட்டிகளும் இதே போன்ற அறிகுறிகளைக் காட்டினாலும், அவை இப்போது குணமடைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் குட்டிகளின் மாதிரிகள் மரபணு கோளாறுகளை பரிசோதிக்க அனுப்பப்பட்டுள்ளன. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் மாதம் மிருகக் காட்சிசாலையில் பிறந்த இந்த புலிக்குட்டிகளால் உயிரியல் பூங்காவில் புலிகளின் எண்ணிக்கையை 11 ஆக உயர்ந்தது. இவற்றில் குட்டிகள் உட்பட ஏழு புலிகள் வெள்ளை நிறத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.







