உக்ரைன் தலைநகர் கீவ்-வில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 6வது நாளாக போர் தொடுத்து வருவதால் பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. இருப்பினும், உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில் இருந்து ரஷ்யா பின்வாங்க தயாராக இல்லை. இந்நிலையில், உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை விமானத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி, ஆப்ரேஷன் கங்கா நடவடிக்கையின் கீழ் இந்தியர்களை வெளியேற்றும் முயற்சிகளை அதிகரிக்க, இந்திய விமானப்படைக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். ஆப்ரேஷன் கங்கா திட்டத்தில் இன்று முதல் இந்திய விமானப் படையின் சி-17 ரக விமானங்கள் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ விட்டு மாணவர்கள் உட்பட அனைத்து இந்தியர்களும் உடனடியாக வெளியேறுமாறு உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் அருகே 40 மைல் தொலைவில் ரஷ்ய ராணுவ படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் தலைநகரில் உள்ள இந்தியர்கள் அனைவரும் ரயில் அல்லது தங்களுக்கு கிடைக்கும் வேறு எந்த வழிகள் மூலமாகவும் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டு வரும் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஹங்கேரிக்கு புறப்பட்டார். உக்ரைனின் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக அண்டை நாடுகளின் உதவியுடன் மத்திய அரசு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியர்களை மீட்டு வரும் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 4 மத்திய அமைச்சர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. அதன்படி ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகருக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சென்றுள்ளார்.