அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் ₹80.44 ஆக சரிந்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையில் நடைபெறும் போரால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக தங்கம், கச்சா எண்ணெய் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
இந்த விலை ஏற்றம் பணவீக்கத்தை அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக உலகம் முழுவதுமே பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. மேலும் பல நாடுகள் தங்கள் முதலீடுகளை டாலர்களில் மாற்றி வருவதால், டாலரின் மதிப்பு உயர்ந்து பல நாடுகள் பணமதிப்பிழப்பை அனுபவித்து வருகின்றன.
இன்று காலை சென்செக்ஸ் குறியீட்டு எண் 270 புள்ளிகள் குறைந்து 59,186 ஆகவும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 65 புள்ளிகள் குறைந்து 17,653 ஆகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் அமைப்பு தனது வட்டி விகித உயர்வை அறிவித்த பிறகு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை அடைந்துள்ளது.
ஃபெடரல் ரிசர்வ் வங்கி 75 பிபிஎஸ் வட்டியை உயர்த்தியுள்ளது. இதனால் வட்டி விகிதத்தை 3 சதவிகிதத்திலிருந்து 3.25 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. இந்த வட்டி விகித உயர்வுக்குப் பிறகு, இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் 80.46 ஆக குறைந்துள்ளது. இதன்மூலன் டாலரின் மதிப்பு வலுப்பெற்று இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது.
நாணயம் அதன் முந்தைய நாளைவிட 0.4% குறைவாக திறக்கப்பட்டது. இதற்கு முன்பு ஆக.29ல், 80.12 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் ஐந்தாவது முறையாக இந்திய ரூபாயின் மதிப்பு 80ஐ தாண்டி உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பைப் போல அண்டை நாடான பாகிஸ்தானின் பண மதிப்பும் கடும் சரிவைச் சந்தித்துள்ளது.









