12 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை – தேனி இடையே அமைக்கப்பட்ட புதிய அகல ரயில் பாதையின் முதல் ரயில் சேவை மதுரை சந்திப்பில் இருந்து இன்று தொடங்கியது.
கடந்த 2011ஆம் ஆண்டு மதுரை – போடி இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி தொடங்கியது. மதுரை – தேனி இடையே அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. தேனி – போடி இடையே அகல ரயில் பாதை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மதுரை – தேனி இடையே மே 27ஆம் தேதி முதல் முன்பதிவற்ற சிறப்பு விரைவு ரயில் போக்குவரத்து தொடங்கும் என்று தெற்கு ரயில்வே துறை அறிவித்தது.
அதன்படி, மதுரை – தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே இருந்த மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதை திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னையில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக துவக்கிவைத்தார்.
இதைத்தொடர்ந்து, இன்று காலை மதுரை சந்திப்பில் இருந்து பயணிகளுடன் மதுரை – தேனி ரயில் முதல் பயணம் தொடங்கியது. மதுரை ரயில் நிலையத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் விரைவு ரயில், வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வழியாக காலை 9.35 மணிக்கு தேனி ரயில் நிலையத்துக்கு சென்றடைகிறது.
தேனி ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்படும் விரைவு ரயில், ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, வடபழஞ்சி வழியாக மாலை 7.35 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தைச் சென்றடைகிறது. இந்த விரைவு ரயில் மொத்தம் 12 பயணிகள் பெட்டியுடன் இயங்குகிறது.