இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை உள்ள இடைப்பட்ட நேரத்தில் ரயில் பயணத்தின் போது பயணிகள் செல்போன், லேப்டாப் போன்ற மின்னணு பொருட்களுக்கு சார்ஜ் போடுவதற்கு ரயில்வே நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தின் போது தங்களின் செல்போன் மற்றும் லேப்டாப் போன்ற மின்னணு பொருட்களுக்கு சார்ஜ் போடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இது போன்ற வசதிகள் நடைமுறையில் ரயில் பயணிகளுக்கு மிகவும் உபயோகமாக உள்ளது. இது ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் கடந்த சில நாட்களாக ரயில்களில் தீ விபத்து அதிகமாக நடந்து வருவது ரயில்வே துறைக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து நடக்கும் தீ விபத்துகளைத் தடுக்க ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக, ரயில் பயணிகள் நள்ளிரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை உள்ள இடைப்பட்ட நேரத்தில் பயணத்தின் போது செல்போன், லேப்டாப் பொன்ற மின்னணு உபயோக பொருட்களுக்கு ரயிலில் உள்ள பிளக் பாயிண்டில் ( plug point) சார்ஜ் போடத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பிட்ட நேரத்தில் ரயிலில் உள்ள பிளக் பயன்பாடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடைமுறையானது கடந்த 16-ம் தேதி முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நடைமுறை புதிது இல்லை எனவும் இருந்தாலும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இது போன்ற நடைமுறைகள் கடந்த 2014-ம் ஆண்டு ஏற்பட்ட ரயில் விபத்துகளால் நடைமுறையில் இருந்தது என்பதும் அதற்கு பிறகு தற்போதுதான், தேவையின் காரணமாக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







