அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தின் தெற்கு பகுதி நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சார்ந்த அருண் சுப்பிரமணியன் நியமிக்க அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தின் தெற்கு பகுதி நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சார்ந்த அருண் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த ஆண்டு அருண் சுப்பிரமணியனை நீதிபதியாக நியமித்தார். இவரது நியமனத்துக்கு தற்போது நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது.
அருண் சுப்பிரமணியனின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 58 உறுப்பினர்கள் அருண் சுப்பிரமணியனை நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். 37 பேர் அவருக்கு எதிராக வாக்களித்தனர்.
இதனையும் படியுங்கள்: அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி திவால் – காரணம் இதுதான்..?
அதை தொடர்ந்து அருண் சுப்பிரமணியனின் நியமனத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிபதியாக முதல் தெற்காசிய வம்சாவளியை சார்ந்தவர் என்கின்ற பெருமையை அருண் சுப்பிரமணியன் பெற்றுள்ளார்.
1970ம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த இந்திய வம்சாவளியைச் சார்ந்த தம்பதிக்கு மகனாக 1979-ல் த அருண் சுப்பிரமணியன் பிறந்தார். கடந்த 2001ம் ஆண்டு கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலையில் பிஏ பட்டம் பெற்ற அவர், 2004 ம் ஆண்டு, கொலம்பியா சட்ட பள்ளியில் சட்டம் பயின்றார். இவரது தந்தை அமெரிக்காவில் பொறியாளராகவும் தாய் புத்தக நிலைய அலுவலராகவும் பணியாற்றினார். சட்டம் படித்து வழக்கறிஞராக பணியாற்றி வந்த அருண் சுப்ரமணியனை அமெரிக்க நாடாளுமன்றம் நீதிபதியாக ஒப்புதல் அளித்துள்ளது.
– யாழன்







