சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டினார்.
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக இந்தியாவில் முதன்முதலில் குரலில் கொடுத்து அவர்களை அலற விட்ட மன்னன் மாவீரன் பூலித்தேவன். அந்த மன்னனின் தலைமைத் தளபதியாக இருந்த வீரமிக்க ஒண்டி வீரனின் நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், ஒண்டிவீரனை போற்றும் வகையில் அவரது தபால் தலை இன்று திருநெல்வேலியில் வெளியிடப்பட்டது.
இந்த விழாவில் பங்கேற்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது:
ஒண்டி வீரன் தமிழ்நாட்டிற்கான சுதந்திர போராட்ட வீரர் இல்லை; அவர் இந்தியாவிற்கான சுதந்திர போராட்ட வீரர். தமிழ்நாடு மட்டுமல்ல; ஒட்டு மொத்த இந்தியாவும் அவரை நினைத்து பெருமை கொள்கிறது.
ஒண்டி வீரனை சுதந்திரப் போராட்ட சரித்திரத்திலிருந்து நீக்குவதற்கு ஆங்கிலேயர்கள் முயற்சி செய்தனர். மக்கள் மனதில் இருந்தும் சுதந்திர போராட்ட சரித்திரத்தில் இருந்தும் ஒண்டி வீரனை நீக்க முடியவில்லை. ஒவ்வொரு முறையும் திருநெல்வேலிக்கு வருகை தரும்போது அதை வீர பூமியாக உணருகிறேன்.
வேலூரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயிரம் வீரர்கள் போரிட்டனர். ஆனால் திருநெல்வேலி சுதந்திர போராட்ட வீரர்கள் ஒவ்வொருவரும் ஆயிரம் வீரர்களுக்கு சமம்.
சுதந்திர போராட்ட வீரர்கள் பூலித்தேவன், ஒண்டி வீரன், வேலு நாச்சியார், பாரதியார் வ.உ. சிதம்பரம் பிள்ளை கனவு கண்ட புதிய இந்தியாவை உருவாக்குவோம்.
நூறாவது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது இந்தியா உலகின் தலைவராக இருக்கும் என்றார் ரவி.
காசியில் ஒவ்வொரு மண்ணிலும் சிவலிங்கம் செறிந்திருப்பதை போல நெல்லையில் ஒவ்வொரு மண்ணிலும் வீரம் செறிந்திருக்கிறது என்று விழாவில் பங்கேற்ற தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.