இந்தியா எப்போதும் உலக நாடுகளுக்கு வலிமையான தோள் கொடுக்கும் நாடாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி 2 நாள் பயணம் பிரான்ஸ் புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து தனி விமான மூலம் பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனை நேரில் சந்தித்து அவருடன் விரிவான ஆலோசனை நடத்தவுள்ளார். இதனை தொடர்ந்து வரும் 15ஆம் தேதி, பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு செல்கிறார். ஐக்கிய அரபு அமீரக அதிபரும், அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் சயத் அல் நயானுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், பிரதமர் மோடி பிரான்ஸ் பயணத்துக்கு முன்பாக பிரெஞ்சு நாளிதழான Les Echos க்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்துள்ள அந்த பேட்டியில், இந்தியா-பிரான்ஸ் இடையேயான 25 ஆண்டுகால நட்புறவு பற்றிப் பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது;
“நாம் இப்போது ஒரு திருப்புமுனையில் இருப்பதாக உணர்கிறேன். கொரோனா தொற்றுநோய்க்குப் பிந்தைய உலகளாவிய சூழலில், இருநாட்டு உறவு ஒரு முக்கியமான படியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அடுத்த 25 ஆண்டுகால பாதையில் பணியாற்றுவதை நாங்கள் எதிர்நோக்கியிருக்கிறோம் . இந்த உறவு மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். இந்தியா கீழை நாடுகளுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட முடியும். இந்தியா எப்போதும் பிற நாடுகளுக்கு வலிமையான தோள் கொடுக்கும் நாடாக இருப்பதை நான் காண்கிறேன். இந்திய கீழை நாடுகளுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் தொடர்பை உருவாக்க முடியும். ஒரு வகையில், தோளுக்குத் தோள் கொடுக்கும் பாலமாக செயல்படும். பிரான்ஸ் உடனான இந்தியாவின் உறவு சிறந்த நிலையில் உள்ளது என்றும், வலுவாகவும், நம்பகமானதாகவும், நிலையானதாகவும் இருக்கிறது.
பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம் மற்றும் குடிமக்கள் என இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்புகள் ஆழமாகி வருகின்றன. 2014ல் இருந்து இரு நாட்டுக்கு இடையேயான வர்த்தகம் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மட்டும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏர்பஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து இரண்டு இந்திய விமான நிறுவனங்கள் 750க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு ஆர்டர் செய்துள்ளன. டிஜிட்டல் உள்கட்டமைப்புக்கான தொலைநோக்குப் பார்வையுடன் இரு நாடுகளும் மிகவும் நெருக்கமாக செயல்பட்டு வருகின்றன. சூரிய ஆற்றல், காற்று மற்றும் சுத்தமான ஹைட்ரஜன் உள்ளிட்ட மாசுபாடற்ற ஆற்றல் துறைகளில் வலுவான ஒத்துழைப்பு காணப்படுகிறது.
இந்தியாவின் இலக்கு மற்றும் எதிர்காலத் திட்டங்களை முன்னெடுக்கும் விதமாக, 2047ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்து அதன் நூற்றாண்டு விழாவை கொண்டாட உள்ளது. அந்த நூற்றாண்டு ஆண்டு விழாவை முன்னிட்டு தெளிவான தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறோம். நிச்சயம் 2047ல் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாறும். அதை நாங்கள் அனைவரும் கான விரும்புகிறோம். கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் வாய்ப்புகள் என அனைத்து மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வளர்ந்த பொருளாதாரத்தை அடைய விரும்புகிறோம்.
இந்தியா ஒரு துடிப்பான கூட்டாட்சி ஜனநாயக நாடு. அனைத்து குடிமக்களும் தங்கள் உரிமைகளைப் பற்றிய பாதுகாப்பு உணர்வுடனும், நாட்டில் தங்களுக்கு உள்ள இடம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையுடனும் இருப்பார்கள். தொழில்நுட்பத்தில் இந்தியா உலக அளவில் முன்னணியில் இருக்கும். நிலையான வாழ்க்கை முறைகள், தூய்மையான ஆறுகள், நீல வானம் மற்றும் பல்லுயிர் நிரம்பிய காடுகள் மற்றும் வனவிலங்குகள் கொண்ட நாடாக… ஜனநாயகத்தின் வலிமைமிகு இந்தியாவிற்கான வலுவான சாட்சியாக இருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா