மும்பையில் நடந்து வரும் 2 வது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணிக்கு 540 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கு இடையிலான, முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்தது. அந்தப் போட்டி டிரா ஆன நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 325 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 150 ரன்களும் அக்சர் பட்டேல் 52 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் பத்து விக்கெட்டையும் சாய்த்து சாதனைப் படைத்தார். பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி, 62 ரன்களில் சுருண்டது.
இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளும் சிராஜ் 3 விக்கெட்டுகளும் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளும் ஜெயந்த் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் இந்திய அணி 2 வது இன்னிங்ஸை தொடங்கியது.
மயங்க் அகர்வால் 62 ரன்களும் புஜாரா, சுப்மன் கில் தலா 47 ரன்களும் எடுத்தனர். கேப்டன் கோலி 36 ரன்களும் அக்சர் பட்டேல் 41 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 540 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக வைத்துள்ளது.
நியூசிலாந்து தரப்பில் சுழல் பந்துவீச்சாளர்கள் அஜாஸ் பட்டேல் 4 விக்கெட்டுகளும் ரச்சின் ரவிந்தரா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையும் படிங்க: மும்பை டெஸ்ட்: பிறந்த மண்ணில் 10 விக்கெட் அள்ளி அஜாஸ் சாதனை!