கான்பூரில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி-20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி, அடுத்து டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 345 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் சதமடித்து அசத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி 5 விக்கெட்டுகளையும் ஜேமிசன் 3 விக்கெட்டுகளையும் அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டாம் லாதமும் வில் யங்கும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் . இவர்களைப் பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் கடுமையாகப் போராடினர்.
நிலையாக நின்று ஆடிய டாம் லாதம் 282 பந்துகளை சந்தித்து 95 ரன்களிலும் வில் யங், 89 ரன்களிலும் ஆட்டமிழந்த பிறகு அந்த அணியில் மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்க வில்லை. கேப்டன் வில்லியம்சன் 18 ரன்களிலும் ஜேமீசன் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து அந்த அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
அக்ஷர் படேல் 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஜடேஜா, உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இதையடுத்து 49 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, இரண்டாம் இன்னிங்கை தொடங்கியது. மயங்க் அகர்வாலும் சுப்மன் கில்லும் களமிறங்கினர். சுப்மன் கில் ஒரு ரன் எடுத்த நிலையில் ஜேமீசன் பந்துவீச்சில் போல்டானார். அடுத்து புஜாரா களமிறங்கினார். இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் எடுத்துள்ளது. நாளை நான்காவது நாள் ஆட்டம் நடக்கிறது.