இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் தொழில் துறையின் பங்கு மகத்தானது. பல தொழில் நிறுவனங்கள் பல வகைகளில் விடுதலை போராட்டத்திற்கு அளித்து உள்ளன.
தொழில் துறை என்றுமே அமைதியாகவே இயங்கி கொண்டிருக்கும். ஆனால், தொழில்துறையால் ஏற்படும் தாக்கம் வலுவானது. சுதந்திர போராட்ட காலத்தில் கூட கிழக்கிந்திய கம்பெனியையும், பிரிட்டிஷ் அரசையும் அதிர வைத்ததில் முக்கிய பங்கு வகித்தன இந்திய நிறுவனங்கள்..
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பல லட்சம் ரூபாய் முதலீட்டில் இரண்டு கப்பல்களை வங்க கடலில் இயக்கி பொருளாதார ரீதியாக பிரிட்டிஷ் அரசாங்கத்தை அதிர வைத்தவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார். பிறகு அதிகார வர்க்கத்தால் சின்னா பின்னமாக்கப்பட்டாலும், சுதேசி அல்லது தற்சார்பு என்ற வார்த்தைக்கே இலக்கணமாகவும் திகழ்கிறார் வ.உ.சிதம்பரனார் என்றால் மிகையில்லை.
டாடா குழுமத்தின் நிறுவனர் ஜாம் செட்ஜி டாடா, இரும்பு எஃகு உலோகத்தின் தேவையை கருத்தில் கொண்டு வெளிநாட்டில் இருந்து இரும்பை இறக்குமதி செய்வதற்கு அதிக விலை கொடுப்பதை மாற்றி ஜார்க்கண்ட்டில் டாடா ஸ்டீல் நிறுவனத்தை துவக்கினார். வெள்ளையனே வெளியேறு என வெளியே சொல்லாமலே பல வகைகளில் விடுதலை போராட்டத்திற்கு சத்தமில்லாமல் ஆதரவளித்தது டாடா குழுமம்.
அதேபோல் பிர்லா குழுமம், மகாத்மா காந்தியின் அரசியல் நடவடிக்கைகளுக்கு பிர்லா மாளிகையை வழங்கியதுடன் ,விடுதலை போராட்ட வீரர்களுக்கு பல வகைகளில் உதவியது. பஜாஜ் நிறுவனத்தின் ஜம்னாலால் பஜாஜ் , தேசத்தந்தை மகாத்மா காந்தியின் தொண்டராகவே வலம் வந்தார்.
தமிழ்நாடு உட்பட தெனிந்தியா முழுவதுமுள்ள பருத்தி நூற்பாலைகள் விடுதலை போராட்டத்திற்கு பெரும் பங்காற்றியது. இதைக்கண்ட பம்பாய், பரோடாவிலுள்ள நூற்பாலைகளுக்கும் விடுதலை போராட்ட வேட்கை அதிகமாகியது.
டிவிஎஸ் குழுமம், லஷ்மி மில்ஸ், முருகப்பா போன்ற தொழில் நிறுவனங்கள் ஒரு புறம் கிழக்கிந்திய கம்பெனியுடன் தொழில்நுட்ப கூட்டுறவில் இருந்தன. மறுபுறம் விடுதலை போராட்டத்திற்கும் ஆதரவளித்தன. இன்று நவீன பொருளாதாரம் சொல்லும் , கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வை உலகிற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் அன்றே எடுத்து சொல்லியது இந்திய நிறுவனங்களே…
தமிழ்நாட்டு வர்த்தகர்கள் பர்மா, மலேசியா மற்றும் அண்டை நாடுகளுடன் வர்த்தக தொடர்பில் இருந்து வலிமையான பொருளாதார சக்தியாக இருந்ததை பிரிட்டிஷாரால் கடைசி வரை ஜீரணிக்க முடியவில்லை..
தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் கூட்டுறவு வங்கிகள், வர்த்தக வங்கிகள், இன்சூரன்ஸ் மற்றும் நிதி நிறுவனங்கள் விடுதலை போராட்ட காலத்தில் வலுவாகவே செயல்பட்டு நிதி மேலாண்மையிலும் சிறப்பாகவே செயல்பட்டன. சுதேசி இயக்கத்தின் நீட்சியாக உப்பு சத்யா கிரகமும், அந்நிய பொருட்கள் புறக்கணிப்பும் விடுதலை போராட்டத்தின் புதிய பரிமாணம்.
பொருளாதார புரட்சியோடு, ஒருபுறம் மகாத்மா காந்தி தலைமையிலான அஹிம்சை வழியிலான போரட்டம் உலக வரலாற்றில் தனி இடம் பிடித்தது. மற்றொருபுறம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கட்டமைத்த இந்திய தேசிய ராணுவத்தின் வலிமையும் விடுதலை போராட்டத்தை, இறுதிக்கட்டத்திற்கு நகர்த்தியது…
பொருளாதார அச்சுறுத்தல் என்பது , சாதாரண மக்களை மட்டுமல்ல ஆட்சியாளர்களையும் நிலைகுலையச் செய்யும் என்பதை பிரிட்டிஷாருக்கு உணர செய்ததில் தொழில்துறையின் பங்கு மகத்தானதே.