ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக இருக்கும் தகுதி இந்தியாவிடம் இருக்கிறது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சவுதி அரேபியா பயணம் மேற்கொண்டுள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் சவுதி அரேபியாவுக்கு ஜெய்சங்கர் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். அங்கு அந்நாட்டின் மன்னர் முகமது பின் சல்மானை சந்தித்து இருநாட்டின் உறவு குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளின் எரிசக்தி, வர்த்தகம், உட்கட்டமைப்பு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினர்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு இந்தியா தகுதி படைத்த நாடு என்றார். தற்போதைய சர்வதேச சூழலை உணர்ந்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றங்கள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயகமாகவும், ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாகவும், அணு ஆயுத சக்தியிலும், தொழில்நுட்ப மையமாகவும் திகழும் இந்தியா ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக இருக்க அனைத்து தகுதியையும் பெற்றுள்ளது.
இந்தியா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக வருவதால் சர்வதேச பாதுகாப்பு மேம்படுவதுடன், கவுன்சிலின் செயல்பாடும் உறுதிபெறும் என்றுள்ளார். உலகின் மதிப்புமிக்க அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையில் சக்தி வாய்ந்த அமைப்பு அதன் பாதுகாப்பு கவுன்சில் தான். இதில் அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இதில் இந்தியா தற்காலிக உறுப்பினராக தற்போது உள்ள நிலையில் நிரந்தர உறுப்பினராகும் முயற்சியில் சமீப காலமாக தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
-ம.பவித்ரா









