INDIA – கூட்டணியை சேர்ந்த எம்.பிக்கள் குழு டெல்லியில் இருந்து விமானம் மூலம் மணிப்பூர் புறப்பட்டனர். இன்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து கள ஆய்விலும் ஈடுபட உள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினர் பழங்குடி அந்தஸ்து கோரி வரும் நிலையில், இதற்கு குகி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடி இன அந்தஸ்து வழங்கப்பட்டால் தங்கள் கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீட்டு சலுகை பாதிக்கப்படும் என அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தொடர்பாக கடந்த 3 மாதங்களுக்கு முன் நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. பின்னர் அது பெரிய கலவரமாக மாறியது. இதனால் மொத்த மாநிலமும் முடங்கியுள்ளது. குகி இனத்தைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர். பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதுவரை சூழ்நிலை கட்டுக்குள் வரவில்லை. இந்நிலையில், கலவரத்தின் போது குகி பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் பதிலளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் நாடாளுமன்றம் முடங்கியது.
சுமார் 3 மாதங்களுக்கு பிறகு, நிபந்தனைகளுடன் பகுதியளவு இணைய சேவைக்கு மணிப்பூர் மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. அப்போதும் மொபைல் போனில் இணைய சேவைக்கான தடை தொடர்கிறது.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணியை சேர்ந்த 20 எம்பிக்கள் அடங்கிய குழு இன்று மணிப்பூர் செல்கிறது. இதன்படி தமிழ்நாட்டை சேர்ந்த திமுக எம்பி கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் மற்றும் அக்கட்சியை சேர்ந்த ரவிக்குமார் உள்ளிட்ட எம்.பிக்கள் குழு விமானம் வாயிலாக மணிப்பூர் புறப்பட்டனர்.
இவர்களோடு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, கவ்ரவ் கோகாய், பீகாரில் இருந்து ஜனதா தள் கட்சியை சேர்ந்த ராஜிவ் ரஞ்சன், அனில் பிரசாத் கட்ஜ், மேற்கு வங்கத்திலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுஷ்மிதா தேவ், பௌலோ தேவி நெடாம், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சந்தோஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஏ.ஏ.ரஹீம், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சேர்ந்த மனோஜ் குமார், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஜவாத் அலி கான் ஆகியோரும் சென்றனர்.
அதோடு, ஜார்கண்ட் முக்தி மோட்சா கட்சியை சேர்ந்த மஹா மஜ்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முஹமத் ஃபாஷில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த முகமத் பஷீர், புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியை சேர்ந்த பிரேமச்சந்திரன், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஷுஷில் குப்தா, சிவ சேனா கட்சியை சேர்ந்த அரவிந்த் ஷவாந்த், ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியை சேர்ந்த ஜெயந்த் சிங் ஆகியோரும் மணிப்பூர் சென்றனர்.
இந்த எம்பிக்கள் குழு இன்று பாதிக்கப்பட்ட மக்களையும், நாளை மணிப்பூர் ஆளுநரையும் சந்திக்க உள்ளனர்.