சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள்: மத்திய அரசு

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை அடுத்து சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சுதந்திர தின கொண்டாட்டம்: நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. வரும் ஆகஸ்ட்…

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை அடுத்து சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சுதந்திர தின கொண்டாட்டம்:

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. வரும் ஆகஸ்ட் 15 அன்று நாடு தனது 76வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ளதை ஒட்டி இந்த ஆண்டு சுதந்திர தினத்தை வெகு விமரிசையாகக் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை பறக்கவிடுவதற்கு ஏற்ப சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தொடர்ந்து 3 நாட்கள் தேசியக் கொடியை பறக்கவிடுமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகள்:

இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

தூய்மைப் பணிகளை மேற்கொள்க:

அதில், சுதந்திர தினத்தன்று நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் தூய்மை இந்தியா பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னார்வளர்களைக் கொண்டு முக்கிய பகுதிகளை தூய்மைப்படுத்துமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரும் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும்:

சுதந்திர தினத்தை ஒட்டி பெரும் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும், சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது கொரோனா தொற்றை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

அதிகரிக்கும் கொரோனா பெருந்தொற்று:

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையின்படி நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 42 லட்சத்து 23 ஆயிரத்து 557 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 16 ஆயிரத்து 561 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்போது சிகிச்சையில் இருக்கிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 49 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதன் மூலம் உயிரிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 928 ஆக உயர்ந்துள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.