இந்தியாவில் யானை வழித்தடங்கள் அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானைகளின் இரு வாழ்விடப் பகுதிகளை இணைக்கும் யானை வழித்தடங்கள், அவை புலம்பெயா்வதற்கான உகந்தச் சூழலை தருகின்றன. புலம்பெயா்வு தடைபடுவதால் யானைகள் தனிமைப்படுத்தப்படுவதோடு, ஒத்த மரபணு விலங்கினங்களுக்கு இடையேயான இனப்பெருக்கம் அவற்றை அழிவு நிலைக்கு இட்டுச் செல்கின்றன. இதனால், யானைகளைப் பாதுகாப்பதில் இந்த வழித்தடங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
கடந்த 2010-ம் ஆண்டு வெளியான அறிக்கையின்படி, யானை வழித்தடங்களின் எண்ணிக்கை 88ஆக இருந்தது. இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் யானை திட்டம், மாநில வனத்துறையினா் மற்றும் இந்திய வனஉயிரினங்கள் அமைப்பின் தொழில்நுட்ப வல்லுநா்கள் உதவியுடன் கடந்த இரு ஆண்டுகளாக யானை வழித்தடங்கள் குறித்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டன.
’இந்தியாவில் யானை வழித்தடங்கள்’ என்ற தலைப்பில் அண்மையில் வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“இந்தியாவில் 150 யானை வழித்தடங்கள் உள்ளன. அதிகபட்சமாக மேற்கு வங்க மாநிலத்தில் 26 யானை வழித்தடங்கள் உள்ளன. மாநிலங்களுக்கு இடையே பரவிக் காணப்படும் நான்கு யானை வாழ்விடப் பிராந்தியங்களில் கிழக்கு-மத்திய பிராந்தியத்தில் 52, வடகிழக்குப் பிராந்தியத்தில் 48, தெற்குப் பிராந்தியத்தில் 32, வடக்குப் பிராந்தியத்தில்18 யானை வழித்தடங்கள் காணப்படுகின்றன.
இந்த வழித்தடங்களில் 126 வழித்தடங்கள் மாநில எல்லைக்குள்ளும், 12 வழித்தடங்கள் இரு மாநிலங்களுக்கு இடையேயும் அமைந்துள்ளன. இந்தியா-நேபாளம் இடையே 6 யானை வழித்தடங்கள் அமைந்துள்ளன. சத்தீஸ்கரை ஒட்டிய மகாராஷ்டிரத்தின் விதா்பா பிராந்தியம், கா்நாடகத்தை ஒட்டிய தெற்கு மகாராஷ்டிரம், ஒடிஸாவிலிருந்து மத்திய பிரதேசம் மற்றும் வடக்கு ஆந்திரம் என தங்களுக்குரிய எல்லைகளை யானைகள் விரிவுப்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மாநிலங்கள் யானைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியாக அவற்றின் வாழ்விடச் சூழலை மதிப்பீடு செய்வதோடு, தரவுகளின் அடிப்படையில் யானை வழித்தடங்களை அடையாளப்படுத்துவதும் முக்கியமானது. யானைகளின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படும் வடகிழக்கு மாநிலங்களில், அவற்றின் இடப்பெயா்வும் குறைந்த அளவில் உள்ளது”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.







